தயாரிப்பாளரை ஏமாற்றிய பாண்டிராஜ்... சூர்யாவின் பசங்க 2 படத்துக்கு தடை?
பாண்டிராஜ் இப்போது சூர்யா - அமலா பால் நடிக்கும் பசங்க 2 படத்தை இயக்கி வருகிறார். விரைவில் ரிலீசாகவிருக்கும் இந்தப் படத்துக்கு பெரும் சிக்கல் காத்திருக்கிறது. படத்துக்கு தடைகேட்டு நீதிமன்றம் போகிறார் தயாரிப்பாளர் மதுராஜ்.
பாண்டிராஜ் தயாரித்து இயக்கி, சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த மெரீனா படம் நினைவிருக்கிறதா...

இந்தப் படம் வெளியானபோது, அதன் மலையாள உரிமையைப் பெற்றவர்தான் மதுராஜ். பின்னாளில் தனது ஏடிஎம் என்ற நிறுவனம் மூலம் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படத்தைத் தயாரித்தார்.
மெரீனா படத்தை கேரளாவில் வெளியிடவும், அதை மலையாளத்தில் டப் செய்யவும் ரூ 2.50 லட்சத்தை பாண்டிராஜுக்குக் கொடுத்திருக்கிறார். பணத்தை வாங்கிக் கொண்டு ஒப்பந்தம் போட்ட பாண்டிராஜ், தனது பசங்க பட நிறுவன லெட்டர் பேடில் மெரீனா மலையாள உரிமையை எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் இதையே ஒப்பந்தப் பத்திரத்தில் முரண்பாடாகக் குறிப்பிட்டுள்ளார். லேப் லெட்டரையும் தராமல் விட்டுள்ளார்.
இதனால் மதுராஜால் படத்தை வெளியிட முடியவில்லை. எதற்கு இந்த வம்பு என்று முடிவு செய்து, பணத்தையாவது திரும்பக் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக பணத்தைத் தராமல் இழுத்தடிக்கிறாராம் பாண்டிராஜ். உஷாராக, தான் வாங்கிய 2.50 லட்சத்தை ஆவணத்தில் குறிப்பிடாமல், வெறும் 1 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளார். அன்றைக்கு நட்புடன் இருந்ததால், பார்த்துக் கொள்ளலாம் என்று அமைதியாக இருந்த மதுராஜுக்கு இன்று பணத்தைத் திரும்பப் பெறுவதில் பெரும் சிக்கல்.
எனவே தனக்கு முழுப் பணத்தையும் வட்டியுடன் திருப்பிச் செலுத்தும் வரை பசங்க 2 படத்தை வெளியிடத் தடைகேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளார் மதுராஜ்.


Click it and Unblock the Notifications











