இந்தா வந்துட்டாங்கல்ல.. பைசன் மாரி செல்வராஜை கைது செய்யனுமாம்.. அய்யோ அய்யோ!
சென்னை: விக்ரமின் மகன் துருவ்வை வைத்து பைசன் காளமாடன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். நேற்று வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பலரிடமும் பெற்றிருக்கிறது. முக்கியமாக துருவ் விக்ரமின் உழைப்பை பலர் பாராட்டிவருகிறார்கள். மேலும் இந்தப் படத்தையும் முக்கியமான படமாக மாரி கொடுத்துவிட்டார் என்று பேச்சுக்கள் எழுந்திருக்கும் சூழலில் அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் ஒருதரப்பினர் வைத்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்துவிட்டார். சாதிய கொடுமைகளை அப்பட்டமாக முதல் படத்தில் காண்பித்த அவர் அடுத்ததாக இயக்கிய கர்ணன், மாமன்னன், வாழை என தொடர்ந்து தனது படங்களில் பதிவு செய்தார். இதன் காரணமாக அவர் கொண்டாடவும்படுகிறார்; ஒருதரப்பினரால் விமர்சிக்கவும்படுகிறார்.
படைப்பாளர்கள் கொண்டாடுகிறார்கள்: ஆதிக்க சாதி மனப்பான்மையுடையவர்கள்தான் மாரி செல்வராஜின் படங்களையும், அவரது வெற்றியையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறுகிறார்கள். அதேசமயம் கோலிவுட்டில் பாரதிராஜா தொடங்கி வெற்றிமாறன், மணிரத்னம்வரை மாரியை தலைமேல் தூக்கி வைத்துதான் கொண்டாடுகிறார்கள். ஏனெனில் மாரி செல்வராஜ் செய்துகொண்டிருப்பது எவ்வளவு அவசியமானது என்பது அவர்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கிறது.

பைசன் காளமாடன்: சூழல் இப்படி இருக்க விக்ரமின் மகன் துருவ்வை வைத்து பைசன் காளமாடன் படத்தை இயக்கியிருக்கிறார் அவர். இதில் பசுபதி, லால், அமீர், அனுபமா, மதன் என பலர் நடித்திருக்கிறார்கள். நேற்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்துக்கு பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்துவருகின்றன. அதேசமயம் மாரியின் முந்தைய படைப்புகளில் இருந்த காத்திரம் இதில் இல்லை என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.
இது வேறு ஸ்டைல்: ஆனால் இந்தப் படத்தில் மாரி வேறு ஸ்டைலில் வந்திருக்கிறார். சொந்த சாதிக்குள் இருக்கும் முரண்களையும் அதை படத்தில் காண்பித்த விதமும் அட்டகாசமாக இருந்ததாக பலரும் கொண்டாடுகிறார்கள். மேலும் துருவ் விக்ரமுக்கும் நல்லதொரு அடையாளத்தை கொடுத்திருக்கிறார் என்றும் கருத்துக்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்று ஒருதரப்பினர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
என்ன நடந்தது?: அதாவது பைசன் திரைப்படத்தில் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான காட்சிகள் இருப்பதாகவும் அவற்றை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து சத்ரிய சான்றோர் படை என்ற கட்சியினர் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருக்கும் திரையரங்குக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியினர், "மாரி செல்வராஜ் என்ற இயக்குநர் தொடர்ந்து சாதி மோதலை தூண்டும் விதமாகவும், தென் மாவட்டங்களில் கலவரங்களை தூண்டும் விதமாகவும் படத்தை இயக்குகிறார். அவரை கைது செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்கள்.


Click it and Unblock the Notifications











