பர்ஸ்ட் ஷோ.. 17ம் எண் சீட்.. "நீ எங்களை விட்டுப் போகலண்ணா".. தள்ளி உட்காரும் ரசிகர்கள்!
பெங்களூர் : மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் ஜேம்ஸ் திரைப்படம், அவரின் பிறந்த நாளான இன்று திரையரங்கில் வெளியானது.
கன்னடம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் மட்டும் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியானது.
புனித் வழக்கமாக குறிப்பிட்ட இருக்கையில் அமர்ந்து திரையரங்குகளில் பார்ப்பதால் பெரும்பாலான திரையரங்குகளில் முதல் காட்சிகளில் 17 எண் கொண்ட சீட் காலியாக வைக்கப்பட்டு இருந்தது.

புனித் ராஜ்குமார்
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்தது கன்னட திரையுலகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் சோகத்தில் மூழ்கியது. புனித் ஒரு நடிகராக மட்டும் இல்லாமல், எளிமையானவராகவும், மக்கள் மீது அவர் வைத்திருந்த பாசம், மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு உதவிய குணம் போன்றவற்றால் ஏராளமான மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

ஜேம்ஸ்
புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளான இன்று, அவரின் சமாதி மீது மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் புனித்தின் ரசிகர்கள் இரத்த தானம், அன்னதானம், கண்தானம் போன்றவற்றை செய்து வருகின்றனர். பெங்களூரில் உள்ள வீரேஷ் தியேட்டர் வளாகத்தில் 30 பிரம்மாண்ட கட்அவுட்களை அமைத்து அவரது ரசிகர்கள்அஞ்சலி செலுத்தினர்.

தள்ளி உட்காரும் ரசிகர்கள்!
புனித் நடித்த கடைசி திரைப்படமான ஜேம்ஸ் உலகம் முழுவதும் 4,000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மறைந்த நடிகர் புனித், எப்போது திரையரங்குக்கு வந்து படம் பார்த்தாலும், ஒரு குறிப்பிட்ட இருக்கையில் அதாவது சீட் எண் 17ல் அமர்ந்து தான் படம் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இதனால், கர்நாடகாவில் பல திரையரங்குகளில் முதல் காட்சிகளில் 17 எண் கொண்ட சீட்டை காலியாகவே வைத்திருந்தனர். புனிதத்தின் ஆன்மா திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்க்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

திருவிழா போல
"நீ எங்களை விட்டுப் போகலண்ணா" எங்களோடுதான் இருக்கிறீர்கள் என்று ரசிகர்கள் செய்த இந்த செயல் மிகவும் நெகிழ்ச்சியாகவே இருந்தது. மக்கள் அவரை மட்டுமல்ல அவரின் ஆன்மாவையும் நேசிக்கிறார்கள். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரின் கடைசி படத்தை கண்களில் கண்ணீர்வடிய பார்த்து வருகின்றனர். புனித்தின் பிறந்த நாளை மாநிலம் முழுவதும் ஒரு பண்டிகை போல வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











