கபாலிக்கு அப்புறம்… 2.ஓ க்கு முன்னாடி… ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்வாரா ரஜினி?
கபாலி ரிலீஸுக்கு தயாராகி விட்டது. ஜுலை மாதம் ரிலீஸாகும் படத்துக்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பை பார்த்தால் வெகுநாட்கள் கழித்து ஒரு தமிழ் படம் நூறு நாட்களை தாண்டி சாதனை படைக்கும் என்று தெரிகிறது. ஆனால் அது ரிலீஸாகும் தியேட்டர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது.
கபாலிக்கு அடுத்து சென்ற ஆண்டு இறுதியில் ஆரம்பித்தது 2.ஓ. ஆறு மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் இதுவரை நூறு நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். இதில் ரஜினியும் வில்லன் அக்ஷய் குமாரும் இருக்கும் காட்சிகள் மட்டும் அறுபது நாட்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட பாதி படம் முடிந்திருக்கிறது. எடுத்தவரை எடிட் செய்து பார்த்து வருகிறார் ஷங்கர்.

இன்னும் ஆறு மாதங்கள் பாக்கி இருக்கிறது. ஆகஸ்ட்டில் தொடங்கும் ஷூட்டிங் முடிய அடுத்த ஆண்டு மார்ச் ஆகிவிடும். அதன் கிராபிக்ஸ் உள்ளிட்ட போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் இருக்கின்றன. அதற்கு ஒரு ஆண்டாவது தேவைப்படும். எனவே 2.ஓ ரிலீஸ் ஆக 2018 கோடை விடுமுறை வரையாவது காத்திருக்க வேண்டும்.
இடையில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு தலைவரை தரிசிக்க முடியாதா? என ஏங்குகின்றனர் ரசிகர்கள். எனவே இடையில் ஒரு படத்தில் சின்ன ரோலிலாவது வந்து போனால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
இதற்கிடையே சமீபத்திய செய்தியில் மலேசிய தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்கும் படத்தில் ஜாக்கிசானுடன் ரஜினியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக வந்துள்ளது. அது நிறைவேறினால் இடையிலும் 'தலைவர் தரிசனம்' கிடைக்கலாம்.
ஜாக்கிசான் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க ஆர்வமாகத்தான் இருக்கிறாராம். இந்தப் படமா? அல்லது இளம் இயக்குநர்களில் ஒருவரது படமா? ரஜினி வந்ததும் தெரிந்துவிடும்!


Click it and Unblock the Notifications











