நான் கடவுளாக நினைக்கும் ரஜினியின் வாழ்த்து ஆஸ்கர் விருதுக்கும் மேல்! - ஆர்கே சுரேஷ்
ஆர் கே சுரேஷ்... தயாரிப்பாளர். தாரை தப்பட்டை மூலம் பாலாவால் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்டவர்.
இவர் தனது ஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பாக தயாரித்த சீனு ராமசாமி இயக்கிய, விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான 'தர்மதுரை' திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.

நூறு நாட்கள் கடந்து சாதனை படைத்த தர்மதுரை படக் குழுவினரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சந்தித்து பேசி வாழ்த்து கூறினார்.
சூப்பர்ஸ்டார் ரஜினியுடனான உரையாடல் தன் வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வு என்று நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் கூறினார்.
அவர் கூறுகையில், "சிறு வயது முதல் சூப்பர் ஸ்டாரின் படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். அவர் நடிப்பில் வெளியாகும் படங்களை பார்க்க முட்டி மோதி டிக்கெட்டுகளை வாங்கி அவரை வெள்ளித் திரையில் பார்த்து வியந்தவன் நான்.
தாரை தப்பட்டை படத்தில் எனது நடிப்பு அவரை மிகவும் கவர்ந்ததாகவும், மேலும் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் தான் நடிப்புத் திறனை முழுமையாக வெளிக்கொண்டுவர முடியுமென்றும், அதை நான் சரியாக செய்துள்ளேன் என்றும் கூறினார்.
என் தயாரிப்பில் உருவான தர்மதுரை படத்தின் நல்ல விஷயங்களைக் கூறி படக்குழுவினருக்கு பாராட்டுத் தெரிவித்தார். மேலும் நான் மேன்மேலும் பல படங்களில் நடித்து சிறந்த நடிகனாய் வரவேண்டும் என்று ஆசி கூறினார்.
நான் கடவுளாக நினைத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இன்று நேரில் பார்த்ததும் அவரிடம் ஆசிர்வாதம் பெற்றதும் எனக்கு ஆஸ்கார் விருதுக்கும் மேல்," என்றார் ஆர் கே சுரேஷ்.


Click it and Unblock the Notifications











