ப்ளஸ் டூ பரீட்சை நேரத்திலும் பட்டையைக் கிளப்பும் பாட்ஷா!
'தலைவரின் எவர் கிரீன் படமான பாட்ஷா, ப்ளஸ் டூ பரீட்சை நேரத்தில் ரிலீசாகிறதே... கலெக்ஷன் எப்படி இருக்குமோ?' என்று கவலைப்பட்ட ரசிகர்கள் இப்போது உற்சாக வெள்ளத்தில் மிதக்கின்றனர்.
திரையிட்ட அத்தனை திரையரங்குகளிலும் திருவிழாக் கோலம். ஜப்பானில் ரசிகர்கள் ஆடிப் பாடி கொண்டாடுகிறார்கள் இந்தப் படத்தை.

முதல் முறையாக பாட்ஷா படத்தை தொலைக்காட்சியில் சன் டிவி ஒளிபரப்பியபோது, ஏதோ தமிழகம் முழுக்க பந்த் நடப்பதைப் போன்ற நிலை. தெருக்களில், சாலைகளில் மனிதர்கள், வாகனங்கள் நடமாட்டமே அடியோடு குறைந்துபோய், மக்கள் அனைவரும் பாட்ஷாவைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் வீடுகளில். தொலைக்காட்சி விற்பனை நிலையங்களில் ஜேஜே எனக் கூட்டம். எல்லாம் பாட்ஷா பார்க்கத்தான்.
அதன் பிறகு கடந்த 22 ஆண்டுகளில் தொலைக்காட்சிகளில் கணக்கற்ற முறை போடப்பட்டுவிட்டது பாட்ஷா. எப்போது ஒளிபரப்பப்பட்டாலும் சேனல் மாற்றாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.
அந்தப் படத்தைத்தான் தங்களின் பொன்விழா சிறப்பு வெளியீடாக கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது சத்யா மூவீஸ் நிறுவனம். அவர்கள் நினைத்திருந்தால், இந்த பொன் விழாவையொட்டி ஒரு புதுப்படமே தயாரித்திருக்கலாம். ஆனால் பாட்ஷாவை அதற்கு தேர்ந்தெடுத்தார்கள். அது மிகச் சிறந்த முடிவு என நிரூபிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இந்தப் படம் வெளியான அனைத்து அரங்குகளிலுமே கிட்டத்தட்ட ஹவுஸ்ஃபுல். சென்னையில் கடந்த மூன்று நாட்களும் ஹவுஸ்ஃபுல் ஷோக்களாகவே ஓடிக் கொண்டிருக்கிறது பாட்ஷா. இதுவரை வந்துள்ள பாக்ஸ் ஆபீஸ் கணக்குகள் படி, முதல் மூன்று நாட்களில் ரூ 5 கோடி வரை இந்தப் படம் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் மட்டும் முதல் நாளில் ரூ 55 லட்சத்தை இந்தப் படம் வசூலித்துள்ளதாகக் கூறுகிறார்கள்.
தமிழ் சினிமா வரலாற்றில் மறுவெளியீட்டில் இப்படி ஒரு சாதனையைச் செய்த ஒரே படம் பாட்ஷாவாகத்தான் இருக்கும்.


Click it and Unblock the Notifications











