Real Bison Review: பைசன் எப்படி இருக்கு.. ரியல் பைசன் மணத்தி கணேசனின் விமர்சனம்!
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படமான பைசன் - காளமாடன் படம் இன்று அதாவது அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகி உள்ளது. இந்த படத்தின் கதை, இந்திய அணியின் முன்னாள் கபடி வீரர், மணத்தி கணேசனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பட எப்படி உள்ளது என்று ரியல் பைசன் மணத்தி கணேசனே தெரிவித்துள்ளார். அது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பைசன் - காளமாடன் படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா, பசுபதி, பவன், அமீர், லால் என பலரும் நடித்துள்ளார்கள். படத்தை இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரடெக்ஷன்ஸ் நிறுவனமும், அப்லாஸ் எண்டர்டைமெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளார்கள். படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தின் பிரீமியர் ஷோ நேற்று திரையிடப்பட்டது. அந்த நேரத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் பைசன் படம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சில சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்தார்.

மாரி செல்வராஜ் விளக்கம்: அதாவது, " அன்பின் வணக்கம், பைசன் (காளமாடன்) இத்திரைப்படம் எனது பால்ய கால நாயகன் "மணத்தி" P.கணேசன் அவர்களின் வாழ்வையும் உழைப்பையும் கபடியையும் அவர் அடைந்த பெரு வெற்றியையும் கருவாக வைத்து உருவாக்கப்பட்டது தான் என்றாலும் இத்திரைக்கதை பல தென்மாவட்ட இளைஞர்களின் வாழ்வையும் ஏக்கத்தையும் கனவையும் வலிகளையும் சேர்த்து புனையப்பட்ட ஒரு முழு புனைவு திரைக்கதையே ஆகும். ஆகவே இதில் வரும் கதாபாத்திரங்கள். பெயர்கள். சம்பவங்கள் என இத்திரைக்கதையில் சித்தரிக்கப்பட்ட அனைத்தும் என் ஆன்மாவின் புனைவே தவிர யாரையும் எந்த நிகழ்வுகளையும் உண்மையாக காட்டப்படவேயில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். பைசன் (காளமாடன்) என்பவன் நிச்சயம் ஒருவன் அல்ல, தென்மாவட்டத்தில் தன் இலக்கை நோக்கி பயணிக்க துடிக்கும் எண்ணற்ற இளைஞர்களின் சாயலை கொண்டவன்தான் என் காளமாடன். இப்படிக்கு மாரி செல்வராஜ்" என்று பகிர்ந்திருதார்.
ரசிகர்கள் ஆர்வம்: அவர் இவ்வாறு தெரிவித்த பின்னர் மணத்தி கணேசன் குறித்து பலரும் தேடிப் படித்து அவர் யார் என்று தெரிந்து கொண்டார்கள். அவர் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருதை வென்றவர். இந்நிலையில், இன்று சென்னையில் பைசன் படத்தைப் பார்த்த அவர் தனது, விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

மணத்தி கணேசன் விமர்சனம்: அதாவது அவர் பேசுகையில், " இந்த படத்தில் எனது உழைப்பு அனைத்தையும் இயக்குநர் மிகவும் அற்புதமாக படமாக்கி உள்ளார். படம் பார்க்க சென்னைக்கு வரச் சொன்னார்கள். மாரி செல்வராஜ், துருவ் உள்ளிட்ட அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து உள்ளார்கள். சினிமா என்றாலே சுலபமானது என்று நினைத்தேன். ஆனால் அப்படி இல்லாமல், சினிமாவிற்காகவும் மிகவும் சிரமப்படுகிறார்கள். 94ஆம் ஆண்டில் நான் நாட்டுக்காக விளையாடி வெற்றி பெற்ற போது எவ்வளவு மகிழ்ச்சியில் இருந்தேனோ அதைவிட கூடுதல் மகிழ்ச்சியை இந்த படத்தின் மூலம் தம்பி மாரி செல்வராஜ் எனக்கு கொடுத்துவிட்டார். இந்த படத்திற்காக துருவ் என்னுடன் சுமார் ஒரு ஆண்டு காலம் பயணித்தார், முழுக்க முழுக்க அர்பணிப்புடன் இருந்தார். ஏதாவது அடிபட்டால் கூட அது நம்மை என்ன செய்துவிடும் என்று சொல்லி அவரை உத்வேகப்படுத்துவேன் என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











