காந்தாரா ஓடிடி அப்டேட்: ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து… அமேசான் கொடுத்த சர்ப்ரைஸ்
பெங்களூரு: கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான காந்தாரா திரைப்படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
செப்டம்பர் 30ம் தேதி வெளியான காந்தாரா கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் வெளியாகி ஹிட் அடித்தது.
காந்தாரா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என காத்திருந்த ரசிகர்களுக்கு அமேசான் ப்ரைம் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பாட்ஷா
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா திரைப்படம், செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கேஜிஎஃப். படத்தை தொடர்ந்து ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ள 'காந்தாரா' படத்தின் மொத்த பட்ஜெட் 16 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், காந்தாரா இதுவரை 400 கோடிக்கும் மேல் வசூலித்து இந்திய திரையுலகையே மிரட்டியுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 400 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது மிகப் பெரிய சாதனை என சினிமா ஆர்வலர்களால் பாராட்டைப் பெற்றது.

ஒன்மேன் ஆர்மி ரிஷப் ஷெட்டி
ரிஷப் ஷெட்டி, அச்சுத் குமார், சப்தமி கௌடா உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அஜனீஷ் இசையமைத்துள்ளார். ரிஷப் ஷெட்டி இயக்கி அவரே ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், அவரது நடிப்பு தான் உயிர் நாடியாக அமைந்துள்ளது. காடுகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கு நிலங்களை தானமாக கொடுக்கிறார் ராஜா. ஆனால், காலங்கள் கடந்ததும் அந்த நிலங்கள் எல்லாவற்றையும் திரும்ப அபகரிக்க நினைக்கிறார் ராஜாவின் வாரிசு வழியே வந்த பண்ணையார். இன்னொரு பக்கம் ரிசர்வ்ட் ஃபாரஸ்ட் திட்டத்துடன் வனத்துறையும் களமிறங்குகிறது.

ஓடிடி ரிலீஸ் தேதி
பண்ணையார் ஒருபக்கம், ஃபாரஸ்ட் டிப்பார்ட்மெண்ட் இன்னொரு பக்கம், இவர்கள் இரண்டு தரப்பையும் பழங்குடியின கிராம மக்கள் எப்படி சமாளிக்கிறார்கள், இறுதியில் என்ன ஆனது என்பது தான் கதை. இதனை தொன்மையான கதைகள், கலைகள் ஆகியவற்றை பின்னணியாகக் கொண்டு படமாக எடுத்துள்ளார் ரிஷப் ஷெட்டி. முக்கியமாக காந்தாரா படத்தின் கடைசி 20 நிமிடங்களில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பு ரசிகர்களை மிரட்டி விட்டது. சாமியாடியாக மாறும் காட்சியில் ரிஷப் ஷெட்டி நடிப்பில் அசுரனாக கலக்கி இருந்தார் என ரசிகர்கள் பாராட்டி இருந்தனர். திரையரங்குகளில் 50 நாட்களை கடந்த காந்தாரா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

அமேசான் ப்ரைமில் காந்தாரா
செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியான பொன்னியின் செல்வன் இரு வாரங்களுக்கு முன்பே ஓடிடியில் வெளியாகவிட்டது. ஆனால், காந்தாரா மட்டும் இன்னும் வெளியாகாமல் இருந்த நிலையில், நாளை ஓடிடியிலும் ரிலீஸாகிறது. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நாளை (24) அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள காந்தாரா படத்துக்கு ஓடிடி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. காந்தாரா ஓடிடி ரிலீஸ் தேதி உறுதியானாலும் தியேட்டர்களில் இந்தப் படத்தை பார்க்க ரசிகர்களிடம் ஆர்வம் இன்னும் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











