ஆமிர் கான், ஷீனா விவகாரத்தைவிட சென்னை வெள்ளம் முக்கியம்! - தேசிய ஊடகங்களைச் சாடும் சித்தார்த்!
தேசிய ஊடகங்களே, தமிழ்நாடும் இந்தியாவின் ஒரு பகுதிதானே? - சித்தார்த் அதிரடி
சென்னை: ஆமிர் கான், ஷீனா போரா விவகாரங்களை விட, தமிழகத் தலைநகரான சென்னை வெள்ளத்தில் மூழ்கியிருப்பது முக்கியச் செய்தி. அதற்கு முக்கியத்துவம் அளிக்காதது ஏன்? என்று நடிகர் சித்தார்த் தேசிய ஊடகங்களைச் சாடியுள்ளார்.

கடந்த சில நாட்களாக சென்னையில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் உள்ள பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை கிட்டத்தட்ட மழை வெள்ளத்தில் மிதக்கிறது என்றால் மிகையல்ல. வரலாறு காணாத இந்த மழை வெள்ளம் குறித்து, மாநில அளவில் உள்ள ஊடகங்கள்தான் அதிக செய்திகள் வெளியிடுகின்றன. மக்களை எச்சரிக்கின்றன.
ஆனால் தேசிய ஊடகங்கள் இதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.
இதனைக் கண்டித்துள்ள நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, "தேசிய ஊடங்களே.. தமிழக தலைநகர் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. சென்னையும் இந்தியாவைச் சேர்ந்தது தான்.
அமீர்கான், ஷீனா போரா விஷயங்களை விட இது முக்கியம். எங்களையும் பாருங்கள், எங்களைப் பற்றியும் பேசுங்கள், இப்போதாவது!" என்று கண்டித்துள்ளார்.
சித்தார்த்தின் இந்தக் கருத்துக்கு ஏக ஆதரவு குவிந்துள்ளது. லைக்குகளும் ரீட்வீட்களும் அதிகரித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











