சிம்புகிட்ட இன்னும் 150 பீப் பாடல்கள் இருக்காம்.. நாடு தாங்குமா? - கேட்கிறார் ஆவின் பொன்னுசாமி!
சிம்பு ஒரு பீப் பாட்டை வெளியிட்டதே மிகுந்த அசிங்கம், அவமானத்தை உண்டாக்கியுள்ளது. இன்னும் இது போல அவரிடம் 150 பீப் பாடல்கள் இருப்பதாகச் சொல்கிறார். நாடு தாங்குமா என்று கேட்டுள்ளார் ஆவின் பொன்னுசாமி என்பவர்.
"பீப்" பாடலுக்குப் பின் டிசம்பர் மாதம் முதல் தலை மறைவு வாழ்வில் இருந்த நடிகர் சிம்பு இப்போதுதான் வெளியிலேயே வந்திருக்கிறார். சிம்புமீது கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையம் மற்றும் சென்னையில் அடுத்தடுத்த புகார்கள் மாதர் சங்கத்தின் சார்பில் கொடுக்கப்பட்டிருந்தன. தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர்- நிறுவனர் ஆவின் எஸ்.ஏ.பொன்னுச்சாமியும் ஒரு புகாரைக் கொடுத்திருந்தார்.

இதுதவிர, பெண்கள் அமைப்பினர் இடைவிடாத போராட்டங்களையும் நடத்தினர். போலீசாரும் சிம்புவைத் தேடிவருவதாக தெரிவித்தனர். ஆனால், இந்த மூன்று மாத காலமும், "சிம்பு எங்கேயும் ஓடிப் போய் விடவில்லை... அவர் தலைமறைவாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை" என்று சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் ஒரு பக்கம் பேட்டியும் கொடுத்துக் கொண்டிருந்தார். சிம்புவும் அவ்வப்போது வீடியோ அல்லது ஆடியோ பேட்டி வெளியிட்டார். ஆனால் மறந்தும் கூட வெளியில் வரவில்லை. போலீஸ் விசாரணைக்கும் ஆஜராகவில்லை.
ஆனால் காஞ்சிபுரம் வழக்ககறுத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு வேண்டுதல் செய்தார்.
இந்த சூழ்நிலையில்தான் கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய தந்தை டி.ராஜேந்தருடன் ஆஜராகியிருக்கிறார் சிம்பு.
அவிரிடம் 35 கேள்விகள் கேட்டு, அவர் சொன்ன பதிலைப் பதிவு செய்துகொண்டு அனுப்பிவிட்டனர் போலீசார்.
ஆனால் அப்படி சும்மா விடக்கூடிய காரியத்தையா அவர் செய்திருக்கிறார். அவருக்கு தகுந்த தண்டனை தரப்பட வேண்டும் என கொதிக்கிறார் ஆவின் பொன்னுசாமி.
அவர் மேலும் கூறியுள்ளதாவது:
"டாஸ்மாக்கை மூடச்சொல்லி பாடகர் கோவன் ஒரு பாடலைப் பாடியதற்கே அவரை தூக்கிவந்து இருக்கிற செக்ஷன்களையெல்லாம் போட்டு போலீசாரும், இந்த அரசும் படுத்திய பாட்டை நாடறியும். மூன்றரை கோடி பெண்கள் உள்ள தமிழ்நாட்டில் இப்படி ஒரு பாடலை பாடியவரை போலீசார், மூன்று மாதமாக நெருங்கவே முடியாமல் கண்ணாமூச்சு விளையாடியதை என்னவென்று சொல்வது ?
'இன்னும் இதுபோல் 150 பாடல்களை நான் கையில் வைத்திருக்கிறேன்' என்று சிம்பு சொல்லியிருக்கிறார்... வேறு எந்த மாநிலத்திலாவது இப்படி ஒரு பாடலை வெளியிட்டு விட்டு அதோடு நிறுத்தாமல் கைவசம் அதேபோல் பாடல்கள் இருக்கிறது என்று சொல்ல முடியுமா? இந்த துணிச்சலை சிம்புவுக்குக் கொடுத்தது யார்?
ஏதோ சொத்துக் குவிப்பு வழக்கு போல ஆஜராகாமல் இத்தனை இழுத்தடிப்பு செய்தும் கூட இன்னும் ஆணவம் குறையாமல், மன்னிப்பு கேட்கும் பண்பு இல்லாமல், நான் தவறு செய்திருந்தால் அதை இறைவன் பார்த்துக் கொள்வான் என்று சொல்லித் திரிகிற சிம்புவை ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் கண்டிக்க வேண்டும். இல்லையென்றால் இது போன்று ஆயிரம் அவலங்கள் நாட்டில் உருவாகி எந்த தண்டனையும் பெறாமல் மறைந்துவிடும்.
சிம்புவின் 'பீப்' பாடலை ஏதோ ஹிட் சாங் போல என்று நினைத்து இது குறித்த எதுவும் அறியாத நிலையில் நான், என் மனைவி, என் மகள் மூவருமே கேட்டு விட்டோம். அப்போது எங்கள் உள்ளம் வேதனையால் துடித்தது போன்று யாரும் இனி துடிக்கக் கூடாது என்ற நிலையில்தான் வழக்குத் தொடர்ந்தேன்.
சிம்புவின் கேவலமான பாடல் விவகாரத்தின் மீதான புகாரில் என் மனைவி, மகள் இருவரையுமே ஐ- விட்னஸாக போட்டிருக்கிறேன். மற்றவர்கள் நடத்திய போராட்டம், ஆர்ப்பாட்டம் எப்படிப் போகுமோ தெரியாது, நான் கொடுத்துள்ள புகாருக்கும், போட்டுள்ள வழக்கிற்கும் சிம்பு பதில் சொல்லியே ஆக வேண்டும்," என்கிறார்.


Click it and Unblock the Notifications











