அருவி, ஜோக்கர் போன்ற படங்கள் வந்திருக்காது.. அதனால் தான் எதிர்க்கிறோம்.. எஸ்.ஆர். பிரபு ஆவேசம்!
சென்னை: உலகநாயகன் கமல், வெற்றிமாறன், சூர்யா, கார்த்தி, கார்த்திக் சுப்புராஜை தொடர்ந்து தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ஒளிப்பதிவு சட்ட திருத்த வரைவு மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் பிரபலங்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
கருத்துச் சுதந்திரத்தை மொத்தமாக நசுக்கவே ஒன்றிய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நேற்றுடன் முடிந்தது
ஒளிப்பதிவு சட்டம் 1952ல் சில திருத்தங்களை கொண்டு வந்து ஒளிப்பதிவு சட்டம் 2021ஐ அமல்படுத்த முடிவு செய்திருக்கிறது ஒன்றிய அரசு. ஜூலை 2ம் தேதி வரை அது தொடர்பான எதிர்ப்புகளை பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. நாடு முழுவதும் சில பிரபலங்களே அந்த சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பி உள்ளனர்.

இறையாண்மை காக்க
இந்திய அரசின் இறையாண்மையை காக்கவே இப்படியொரு சட்டத் திருத்தத்தை அமல்படுத்த உள்ளதாக ஒன்றிய அரசுக்கு ஆதரவாக சில பிரபலங்களும் இந்த சட்ட திருத்தத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளனர். ஆனால், கருத்துச் சுதந்திரத்தை நசுக்கவும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட மட்டுமே இந்த சட்டம் உதவும் என எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

எதிர்ப்புக் குரல்கள்
பாலிவுட்டை தொடர்ந்து தமிழ்நாட்டில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த சட்டத்திற்கு எதிரான தங்களின் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ட்ரீம் வாரியர் நிறுவன தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவும் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அருவி, ஜோக்கர் வந்திருக்காது
"ஒளிப்பதிவு சட்டதிருத்த மசோதா நாட்டின் இறையாண்மை காக்கவே என ஒரு கூட்டம் கம்புசுத்துகிறது. இவ்வாறான விசயம் முன்பே இருந்திருந்தால் #அருவி #ஜோக்கர் போன்ற படங்கள் வந்திருக்க வாய்ப்பேயில்லை! ஆகவேதான் நாங்கள் அதை எதிர்க்கிறோம். மற்றபடி வாழ்க பாரதம் என முழங்குவதில் எங்களுக்கும் பெருமிதமே!!" எனக் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











