மஹாசிவராத்திரி.. பெங்களூர் ஆதியோகி மையத்திற்கு சென்ற ரஜினிகாந்த்!
பெங்களூர் : மஹாசிவராத்திரியை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெங்களூர் ஆதியோகி மையத்திற்கு திடீரென விசிட் அடித்துள்ளார்.
சிவபெருமானின் வழிபாட்டில் மிக முக்கியமான நாளான மஹாசிவராத்திரி நாள் கொண்டாடப்படுகின்றது.
இந்த நாளில் சிவபெருமான் மீது தீவிரபக்தி கொண்டவர்கள், இரவு முழுவதும் கண்விழித்து இறைவனை வழிபடுவார்கள். இந்த நாளில், பல சிவ ஸ்தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மஹாசிவராத்திரியை முன்னிட்டு தனது அண்ணன் சத்தியநாராயணனுடன் பெங்களூருவில் உள்ள 112 அடி உயர ஆதியோகி மையத்திற்கு திடீரென சென்று வழிபாடு செய்துள்ளார். அண்ணனுடன் அவர் காரில் சென்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி டிராண்டாகி வருகிறது.

112 அடி உயர ஆதியோகி சிலை
கர்நாடகா மாநிலம் சிக்கபல்லபுரா மாவட்டத்தில் உள்ள நந்தி மலை அடிவாரத்தில் 112 அடி உயர ஆதியோகி சிலை கடந்த மாதம் பொங்கல் பண்டிகைக்கு புதிதாக திறக்கப்பட்டது. கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இந்த ஆதியோகி சிலையை திறந்து வைத்தார். இந்த ஆதியோகி மையத்தில் இன்று விடிய விடிய வழிபாடு நடைபெற உள்ளது.

ஜெயிலர்
சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துள்ள நிலையில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ரஜினி விமானம் மூலம் ராஜஸ்தான் சென்றார். இதில் ரஜினிகாந்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன.

மங்களூரில் படப்பிடிப்பு
தற்போது, ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு , மங்களூரில் காந்தாரா படத்தில் இடம் பெற்ற பண்ணை வீட்டில் நடந்து வருகிறது. இதில், ரஜினி மற்றும் ஷிவராஜ்குமார் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படம் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் முந்தைய படங்களைப் போல் இல்லாமல் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில், மோகன்லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், புஷ்பா பட புகழ் சுனில், ரம்யா கிருஷ்ணன்,தமன்னா,யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தை சன் பிக்ஸர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











