பிறந்தநாள் காணும் நடிப்பின் நாயகன்.. எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் என மிரட்டும் லைன் அப்!
சென்னை: நடிப்பின் நாயகன் சூர்யா இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிப்பது மட்டுமன்றி தன்னுடைய சொந்த செலவில் பல மாணவர்களை படிக்க வைக்கிறார், நாட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார்.
சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான சூரரை போற்று மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரின் லைன் அப் ரசிகர்களுக்கு ஆர்வம் கூட்டுகிறது.

ரசிகர்கள் வரவேற்பு
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு எதற்கும் துணிந்தவன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை வெளியான ஃபர்ஸ்ட் லுக், இன்று நள்ளிரவு வெளியான செகண்ட் லுக் என இரண்டிற்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர். சூழ்நிலை சரியாக அமைந்தால் படம் டிசம்பரில் திரைக்கு வரும். பாண்டிராஜ் இந்த படத்தை த்ரில்லர் கதைகளத்தை கொண்டு உருவாக்கியுள்ளார் என தெரிகிறது, எனவே இந்த படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என ரசிகர்களுக்கு நம்பிக்கை உள்ளது.

காரியர் பெஸ்ட்
இதனையடுத்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கிறார். வாடிவாசல் எனும் குறுநாவலை மையமாக வைத்து தயாராகவுள்ள இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இது சூர்யாவின் காரியர் பெஸ்ட் படமாக இருக்கும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை இயக்குனர் வெற்றிமாறன் பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு உள்ளது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
சூர்யா - சிவா கூட்டணி முன்னரே உறுதியானதை அடுத்து சிவா இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளை தொடங்கியதாக தகவல்கள் வந்தன. பின்னர் ஏதும் அறிவிப்பு வெளியாகவில்லை. சிவா தல அஜித்தை வைத்து 3 படங்கள் ஹிட் கொடுத்த நிலையில் நல்ல கதையுடன் சூர்யா படத்தையும் ஹிட் கொடுப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்த படம் குறித்த அறிவிப்பு இன்று ஏதேனும் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

வக்கீலாக சூர்யா
ஆகஸ்ட் மாதம் வெளிவரவுள்ள நவரசா படத்திலும் சூர்யா "கிட்டார் கம்பி மேலே நின்று" என்ற கதையில் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் படங்களுக்கு இடையிலேயே சூர்யா கவுரவ வேடத்தில் வக்கீலாக நடித்துள்ள படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இந்த படத்தை இயக்கி வருகிறார். உறுதியான இந்த லைன் அப்பை தவிர்த்து சூர்யா தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களான பாலா, மாரி செல்வராஜ் ஆகியோரின் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டணி அமைய வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications











