சூர்யாவின் 24 ஒருவழியாக.... முடிவுக்கு வந்தது
சென்னை: நீண்ட மாதங்களாக நீண்டு கொண்டிருந்த 24 படத்தின் படப்பிடிப்பு நேற்று முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தத் தகவலை படத்தின் நாயகன் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அஞ்சான், மாஸ் படங்கள் கவிழ்த்ததில் தனது அடுத்த அடியை மிகவும் கவனமுடன் எடுத்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் சூர்யா இருக்கிறார்.

இதனால் தான் தற்போது நடித்து வரும் 24 படத்தில் சூர்யா சில மாற்றங்களை மேற்கொண்டதாகவும், அதனால் தான் படப்பிடிப்பு நீண்டு கொண்டே சென்றதாகவும் கூறுகின்றனர்.
இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்றோடு முடிவிற்கு வந்துள்ளது. இதைப் பற்றி சூர்யா கூறுகையில் "24 படப்பிடிப்பின் கடைசி நாள் இன்று. எனது இதயத்திற்கு நெருக்கமான மற்றொரு படமிது.
கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்". இவ்வாறு கூறிய சூர்யா 24 படத்தின் மொத்தப் படக்குழுவினருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
அஞ்சான் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் சூர்யாவுடன் இணைந்து நடித்திருக்கிறார் சமந்தா. சமந்தாவைத் தவிர மற்றொரு நாயகியாக நித்யா மேனனும் படத்தில் நடித்திருக்கிறார்.
யாவரும் நலம் படத்தைப் போன்று இப்படமும் ஒரு திரில்லர் + சஸ்பென்ஸ் கலந்த கதையாக உருவாகி இருக்கிறதாம். படத்தில் மொத்தம் 3 சூர்யா என்றும் இவர்களில் ஒருவர் வில்லனாக மிரட்டி இருப்பதாகவும் கூறுகின்றனர்.
படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து விரைவில் பர்ஸ்ட்லுக்கை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர். 24 அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











