அதிரடியாக நான்காவது சங்கம்.. புதிய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஏன்? டி.ராஜேந்தர் விளக்கம்!
சென்னை: டி.ராஜேந்தர் தலைமையில் புதிய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. இது ஏன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஏற்கனவே செயல்பட்டு வருகிறது.
இதுமட்டுமின்றி பிலிம் சேம்பர், கில்டு போன்ற அமைப்புகள் தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் நிலையில், புதிய அமைப்பு ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.

நடப்பு தயாரிப்பாளர்
தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து பிரிந்து சென்ற சில தயாரிப்பாளர்கள், பாரதிராஜா தலைமையில், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற அமைப்பை தொடங்கினர். இந்த நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கடந்த மாதம் 22 ஆம் தேதி, புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்தது.

தோல்வி அடைந்தனர்
அதில், மறைந்த டைரக்டரும், தயாரிப்பாளருமான ராமநாராயணனின் மகனுமான முரளி ராம நாராயணன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட டைரக்டரும், தயாரிப்பாளருமான டி.ராஜேந்தர் மற்றும் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

பாதுகாப்பு சங்கம்
பின்னர் அவர் இந்த தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்றும் இதில் முறைகேடு நடந்ததாகவும் புகார் கூறினார். இதற்கிடையே, டி.ராஜேந்தர் தலைமையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் உருவாகிறது.

மற்ற விவரங்கள்
புதிய சங்கத்தில், தயாரிப்பாளர்கள் சந்திரபோஸ், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் ஆகிய இருவரும் செயலாளர்களாகவும், கே.ராஜன் பொருளாளராகவும் செயல்படுவார்கள் என்று கூறப்படுகிறது. புதிய சங்கம் பற்றிய மற்ற விவரங்கள் வரும் 5 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

முறைகேடு மட்டுமே
இதுபற்றி டி.ராஜேந்தர் கூறும்போது, சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளன. முறைகேடு மட்டுமே தேர்தலாக நடந்திருக்கக் கூடாது. எனவேதான் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு சங்கம் தொடங்கப்படுகிறது. நான் ஒரு ஜனநாயகவாதி. தயாரிப்பாளர்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும் பாடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











