வெளிநாட்டு தமிழ்ப் படவிழாக்கள் ஊழல்மயமாகிவிட்டன!- குமுறும் லட்சுமி ராமகிருஷ்ணன்
சென்னை: நான் இயக்கிய அம்மணி படத்தைப் பார்க்காமலேயே நிராகரித்துவிட்டனர் ஒரு சினிமா பட விழாவில் என்று நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆரோகணம், நெருங்கிவா முத்தமிடாதே படங்களைத் தொடர்ந்து, மூன்றாவதாக அம்மணி என்ற படத்தை இயக்கியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இந்தப் படத்தை துபாய் பட விழாவில் திரையிட முயற்சி மேற்கொண்டார். அந்த முயற்சியில் அவருக்கு கசப்பான அனுபவம் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில், "அம்மணி திரைப்படத்தை துபாய் பட விழாவில் திரையிட வைக்க விண்ணப்பித்தேன். அவர்கள் படத்தை ஆன்லைனில் அப்லோட் செய்யச் சொன்னார்கள். படம் வெளிவரவில்லை என்பதால் அதன் பாஸ்வேர்ட் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்படும். அவர்கள் கேட்கும்போது பாஸ்வேர்டை அளிக்கலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால் அவர்கள் பாஸ்வேர்டை கேட்கவும் இல்லை, படத்தைப் பார்க்கவும் இல்லை. ஆனால் படம் தேர்வாகவில்லை என்று தெரிவித்துள்ளார்கள்.
இது போன்ற முயற்சிகளில், முன் அனுபவம், அந்த படக்குழுவினரில் நாம் எத்தனை பேரை தெரிந்து வைத்திருக்கிறோம் மற்றும் ரெகமண்டேஷன் போன்றவைதான் எடுபடும் என்பது இப்போதுதான் புரிகிறது. நாம் அனுப்பும் படங்களை பரிந்துரை இல்லாமல் பார்க்க அவர்கள் முயற்சிப்பது கூட இல்லை.
தமிழ் சினிமா படவிழாக்கள் என்ற பெயரில் வெளிநாடுகளில் நடக்கும் இதுபோன்ற படவிழாக்கள் ஊழல்மயமானவை என்பது வருத்தத்துக்குரியது.
ஆனால் சராசரி ரசிகர்கள் என் படத்தை ரசிப்பார்கள். அதுதான் எனக்கான விருது," என்றார்.


Click it and Unblock the Notifications











