நடிகர், நடிகையரின் சம்பளத்தைக் குறைக்க தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம்!
சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை எழும்பூரில் நடைபெற்றது.
இதில் சங்கத்தலைவர் தாணு, துணைத்தலைவர்கள் பி.எல்.தேனப்பன், கதிரேசன், செயலாளர்கள் டி.சிவா, ராதாகிருஷ்ணன், பொருளாளர் டி.ஜி.தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில் நடிக, நடிகையர் சம்பளம் குறைப்பது உட்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை இங்கே காணலாம்.
*‘பட அதிபர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் நலனுக்காக விருப்ப ஓய்வு திட்டம் அமல்படுத்தப்படும். இந்த திட்டத்தில் விருப்பம் உள்ளவர்கள் சேரலாம். அவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.
*தயாரிப்பாளர்களுக்கு வீடுகள் கட்டிக்கொள்ள நிலம் வாங்கி கொடுக்கப்படும். இதற்காக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் விரைவில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடத்தப்படும்.

*கேபிள் டி.வி.யில் திரைப்படங்கள், பாடல்கள், டிரைலர்கள் ஒளிபரப்ப புதிய ஒப்பந்தம் போடப்பட உள்ளது. அதிக தொகையை யார் குறிப்பிடுகிறார்களோ அவர்களுக்கு இதற்கான அனுமதி வழங்கப்படும்.
*எனவே தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களின் டிரைலர் மற்றும் பாடல்களை சங்கத்தில் ஒப்படைக்க வேண்டும்.
* 3 ஆண்டுகளுக்கு மேல் சந்தா செலுத்தாத உறுப்பினர்கள் நீக்கப்படுவர்.
* 8 ஆண்டுகளாக மானியம் பெறாமல் தவிக்கும் 550 படங்களுக்கு, மானியம் பெறுவது தொடர்பாக சட்டசபை தேர்தல் முடிந்ததும், புதிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
* நடிக, நடிகையர் சம்பளம் மற்றும் தியேட்டர் கட்டணத்தைக் குறைக்க நடிகர் சங்கம் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டமைப்போடு பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
மேற்கண்ட தீர்மானங்கள் தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


Click it and Unblock the Notifications











