70 வது பிறந்தநாளில் இலக்கிய பணியில் பொன்விழா...கவிப்பேரரசை உள்ளம் உருக வாழ்த்திய முதல்வர்
சென்னை : பாடலாசிரியர், கவிஞர், நாவல் எழுத்தாளர் என பல தமிழ் திரையுலகிலும், இலக்கிய உலகிலும் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு நபராக இருந்து வருகிறார் கவிப்பேரரசு வைரமுத்து.
Recommended Video
1980 ம் ஆண்டு நிழல்கள் படத்தின் முலமாக சினிமா உலகிற்கு அறிமுகமானவர். கடந்த 40 ஆண்டு கால திரைப்பயணத்தில் 7500 க்கும் அதிகமான பாடல்களை வைரமுத்து எழுதி உள்ளார். 7 முறை தேசி விருது வென்ற ஒரே பாடலாசிரியர் இவர் மட்டும் தான்.
இவரின் இலக்கிய மற்றும் கலை சேவையை பாராட்டி பத்மஸ்ரீ, பத்ம புஷண், சாகித்ய அகாடமி உள்ள பல விருதுகளை வழங்கி இந்திய அரசு கெளரவித்துள்ளது.

வைரமுத்துவின் 70வது பிறந்தநாள்
பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான வைரமுத்து இன்று தனது 70 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1953 ம் ஆண்டு தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் பிறந்த வைரமுத்து, இன்று அனைவரும் போற்றும் கவிப்பேரரசாக உயர்ந்துள்ளார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வைரமுத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாழ்த்திய முதல்வர்
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ட்விட்டர் முலம் வைரமுத்துவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில், எழுபதாவது பிறந்தநாள் விழாவையும் இலக்கிய வாழ்வின் பொன்விழாவையும் காணும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு எனது நெஞ்சுக்கினிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வயதில் 70...இலக்கிய வாழ்வில் பொன்விழா
அகவை எழுபதில் அடியெடுத்து வைப்பதும் - அதில் ஐம்பது ஆண்டுகள் இலக்கியப் பணியாற்றியதுமான பெருவாழ்வு உங்களுடையது. முதல் இருபது வயது வரை மட்டுமே தனி வாழ்க்கையாக அமைந்து, அடுத்து அடியெடுத்த ஆண்டு முதல் கலை, இலக்கிய, திரையுலக வாழ்க்கையாக அமைந்துள்ளது உங்களது வாழ்க்கை.

இந்தியாவின் ஒரே கவிஞர்
36 நுல்கள் - 7500 பாடல்கள் என்பது எண்ணிக்கையாகக் கருத முடியாது. தமிழ் இலக்கிய வாசிப்பாளர்களது இல்லத்தின் அலமாரி தோறும் உங்கள் படைப்புகள் அலங்கரித்துக் கொண்டு இருக்கிறது. திரையுலக ரசிகர்கள் உள்ளம் தோறும் குடிகொண்டிருப்பவை உங்கள் பாடல்கள்.வெளியிட்ட புத்தகங்கள் அனைத்தும் விருதுக்குரிய புத்தகங்களாக இருப்பதும், எழுதிப் புகழ்பெற்ற பாடல்கள் பெரும்பாலும் பரிசுக்குரியதாக இருப்பதும் உங்களது திறமைக்கு சாட்சி. ஏழு தேசிய விருதுகள் பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் என்பது சாதாரணமான உயரம் அல்ல. அதே போல் தமிழ்நாடு அரசு விருதை 6 முறை பெற்றுள்ளீர்கள்.

யாருக்கு கிடைக்கும் இந்த பெருமை
உங்களது 17 நுல்களை வெளியிட்டு பேசி இருக்கிறார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். எந்தப் படைப்பாளிக்கும் வாய்க்காத பெருமை இது. கவிஞர்களுக்கு எல்லாம் பெரும் கவிஞரான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களே, கவிப்பேரரசு என்று வாழ்த்தினார் என்றால் அதைவிடப் பெரும் பாராட்டுத் தேவையில்லை.

வைகறையாக நிலைத்த வைரமுத்து
வைரமுத்து என்ற பெயர்ச் சொல்லே மறைந்து, கவிப்பேரரசு என்ற சிறப்புப் பெயரே சிறப்பான பெராக அமையும் அளவிற்கு உங்கள் தமிழே உங்களை உயர்த்தி வைத்துவிட்டது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் வைகறை மேகங்கள் முலமாக இலக்கிய உலகுக்கு அறிமுகம் ஆனீர்கள். மேகமாக கரைந்து விடாமல் வைகறையாகவே நிலைத்துவிட்டீர்கள்.இவை அனைத்தையும் தாண்டி, திராவிட இயக்கம், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என தாங்கள் வலம் வந்தது தான் எங்களைப் போன்றவர்களுக்கு இருக்கும் மகிழ்ச்சி.

திராவிட குரலால் ஒலித்த வைரமுத்து
திராவிட இயக்கம் தந்த தினவுகளோடும் எழுத வந்தவன் நான் என்றும், என்னிடம் பாரதிதாசனும் அண்ணாவும், கலைஞரும் தந்த இலக்கியமிருந்தது என்றும், திராவிட இயக்கம் தந்த பகுத்தறிவுப் பாசமும் சோசலிசக் காதலும் நெஞ்சில் நிலைத்து நின்றன என்றும் வாய்ப்புகளின் சின்னச் சந்து பொந்துகளிலும் பகுத்தறிவு, சோசலிசம், பாட்டாளி வர்க்கம் என்ற என் இதயக் கனவுகளை ஈடேற்றினேன் என்றும் துணிந்து சொல்லும் திராவிடக் குரலாகவும் நீங்கள் வலம் வந்திருக்கிறீர்கள்.

கலைஞர் இன்று இருந்திருந்தால்...
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இன்று இருந்திருந்தால் உச்சி முகர்ந்து வாழ்த்தியிருப்பார்கள். இன்னும் நீங்கள் இலக்கிய உச்சத்தைத் தொட வேண்டும் என்று வாழ்த்துகிறேன். கவிப்பேரரசாற்றுப்படை தொடரட்டும். உங்கள் தமிழே உங்களைப் பல்லாண்டு வாழ்விக்கும் என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











