நடை பயணத்தில் திடீரென மயங்கி விழுந்த நடிகர்... மாரடைப்பா என்ற அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்
சித்தூர்: தெலுங்கு திரையுலகின் முக்கியமான நடிகரான தாரக் ரத்னா ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தாரக் ரத்னா ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி. ராமாராவின் பேரனும், நடிகர்கள் பாலய்யா, ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரின் உறவினரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சித்தூர் பகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடைபெற்ற நடைபயணத்தில் தாரக் ரத்னாவும் கலந்துகொண்டார்.
தொண்டர்கள், ரசிகர்கள் மத்தியில் நடைபயணம் சென்று கொண்டிருந்த தாரக் ரத்னா, தீடீரென மயங்கி விழுந்தது தெலுங்கு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

என்.டி.ஆர் குடும்ப வாரிசு
தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் என்.டி. ராமாராவ். பின்னாளில் ஆந்திராவின் முதலமைச்சராகவும் பதவி வகித்த அவரது குடும்பத்தில் இருந்து பாலய்யா, ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருடன் தாரக் ரத்னாவும் வாரிசு நடிகராக டோலிவுட்டில் களமிறங்கினார். 2002ம் ஆண்டு வெளியான 'ஒகடோ எண் குராடு' என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான தாரக் ரத்னா, தொடர்ந்து யுவ ரத்னா, தாரக், அமராவதி, சாரதி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடை பயணத்தில் பங்கேற்ற தாரக்
2022ம் ஆண்டு 9 ஹவர்ஸ் என்ற வெப் சீரிஸ்ஸில் நடித்திருந்தார் தாரக் ரத்னா. நடிகராக மட்டும் இல்லாமல் தெலுங்கு தேசம் கட்சியுடன் தனது அரசியல் பயணத்தையும் தொடர்ந்து வருகிறார் தாரக் ரத்னா. இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் நாரா லோகேஷ் நடத்திய யுவகலாம் என்ற நடை பயணத்தில் கலந்து கொண்டார்.

திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
தொண்டர்கள், ரசிகர்களுடன் இந்த நடை பயணத்தில் பங்கேற்ற தாரக் ரத்னா, முதலில் சித்தூர் குப்பம் அருகே உள்ள லட்சுமிபுரம் ஸ்ரீவரதராஜ ஸ்வாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார். அதன்பின்னர் அங்கிருந்த மசூதியில் வெள்ளிக்கிழமை சிறப்பு பிரார்த்தனையிலும் பங்கேற்றுவிட்டு, நர லோகேஷ் நடை பயணத்தை தொடங்கினார். அப்போது எதிர்பாரதவிதமாக அவர் திடீரென மயங்கி விழுந்து சுயநினைவை இழந்தார்.

மருத்துவமனையில் அனுமதி
இதனையடுத்து அவரது ரசிகர்களும் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களும் அவரை உடனடியாக குப்பத்தில் உள்ள கேசி என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பிஇ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். முதலுதவிக்கு பின்னர் பெங்களூரு மருத்துவமனைக்கு மாற்ற தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலம்
இதனிடையே மயங்கி விழுந்த தாரக் ரத்னாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா அல்லது வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சினையா என இதுவரை தெரியவில்லை. இந்நிலையில், நடிகர்கள் பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் மருத்துவமனையில் இருக்கும் தாரக் ரத்னாவின் உடல்நிலை குறித்து போனில் கேட்டறிந்ததாக சொல்லப்படுகிறது. 39 வயதே ஆன தாரக் ரத்னா மயங்கி விழுந்தது தெலுங்கு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











