திரைத்துறையை அழிக்கப் பார்க்கும் ரோகினி பன்னீர் செல்வம்! - தாணு ஆவேசம்
சில தியேட்டர்களை கையில் வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த திரையுலகையே அழிக்கப் பார்க்கிறார் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவராக உள்ள பன்னீர் செல்வம் என்று தயாரிப்பாளர் தாணு குற்றம் சாட்டியுள்ளார்.
தெறி படத்தை செங்கல்பட்டு ஏரியாவில் திரையிட முடியாத சூழலை திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் பன்னீர் செல்வம் ஏற்படுத்திவிட்டதாக தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

‘தெறி' படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இன்று செய்தியாளர்களைச் சந்தித்து இந்த பிரச்சினை குறித்துப் பேசினார்.
அவர் கூறுகையில், "செங்கல்பட்டு விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் பன்னீர் செல்வம் தனிப்பட்ட விரோதம் காரணமாக பெரிய நடிகர்களின் படங்களைத் தடுக்க நினைக்கிறார். விஜய் மீது உள்ள தனிப்பட்ட விரோதம் காரணமாகவே ‘தெறி' படத்தை செங்கல்பட்டு ஏரியாவில் வெளியிட மாட்டேன் என்று முடிவு எடுத்திருக்கிறார்.
இது சினிமாவை அழிக்கும் செயல். ஒருவரை ஒருவர் சார்ந்துதான் சினிமாவில் இயங்க முடியும். எதற்கெடுத்தாலும் உண்ணாவிரதம், ஸ்ட்ரைக் என்று போனால் சினிமா எப்படி வாழும்? சினிமா அழிக்கப் பார்க்கிறார்கள் பன்னீர் செல்வம் போன்ற ஆட்கள்.
தயாரிப்பாளர்களுக்கு ஒழுங்காக பணத்தைத் தருவதே இல்லை இவர்கள். எங்கள் படங்களை வாங்கி திரையிட்டு வசூலிக்கும் பணத்தில் எங்களுக்கு உரிய பங்கை மட்டும் வருடக் கணக்கில் தராமல் இழுத்தடிக்கிறார் பன்னீர் செல்வம்.
படத்தை வெளியிட என்னிடம் பணம் கேட்டவர்தான் இவர். ஏற்கெனவே பாயும் புலிக்கு 25 லட்சம் வாங்கிய பிறகுதான் வெளியிட்டார். கணிதனுக்கும் ரூ 25 லட்சம் கொடுத்தேன்.
இப்படி மிரட்டிப் பணம் பறிப்பைதை ஒரு தொழிலாகவே வைத்திருக்கிறார்.
செங்கல்பட்டு ஏரியாவில் மினிமம் கியாரண்டி அடிப்படையில் படத்தை வாங்க மறுத்தார்கள். 10 சதவீதம்கூட முன் பணம் பெறாமல் படத்தை நாங்கள் கொடுத்தால் பல கோடிகள் செலவழித்து படமெடுக்கும் தயாரிப்பாளரின் பணத்துக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதனாலேயே அவர்களுக்கு படம் கொடுக்க இயலவில்லை.
இருப்பினும், ‘தெறி' திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் நல்ல வசூலை வாரிக் குவித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்றுள்ளது. விநியோகஸ்தர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இரண்டு படத்திற்கு உண்டான வசூலை ஒரே படத்தில் பெற்றிருப்பதாக வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.
செங்கல்பட்டு ஏரியாவில் ‘தெறி' படம் வெளியிட முடியாததால் அந்த பகுதியில் உள்ள திரையரங்குகள் நல்ல வசூலை இழந்துவிட்டன. அந்த பகுதியில் வாழும் விஜய் ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அங்கு ‘தெறி' வெளியாகாமல் போனதற்கு காரணம் நாங்கள் அல்ல. அந்த ஏரியா விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள்தான் காரணம்.
இப்படத்தை அமீர் ‘தெறி' படத்தை வாங்கி வெளியிட்டு அதனால் நஷ்டம் ஏற்பட்டதாக வெளிவந்த செய்திகள் எதுவும் உண்மையல்ல. காரணம் அமீருக்கு ட்விட்டரில் அக்கவுன்டே இல்லை.
திரையரங்க உரிமையாளர் சங்கத்தில் தியேட்டர் உரிமையாளர்கள்தான் தலைமைப் பதவியில் இருக்க வேண்டும். பன்னீர் செல்வம் போல கேன்டீன் நடத்துபவர்கள், பஜ்ஜி போன்டா விற்பவர்கள் இருக்கக் கூடாது. அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்பிரமணியன் போன்றவர்கள் தலைமைப் பதவிக்கு வரவேண்டும்," என்றார்.


Click it and Unblock the Notifications











