Vijay: பிரச்னை வந்ததும் விஜய்யை விட்டுட்டு ஓடிட்டாங்க.. எல்லா தப்புக்கு காரணமே.. தாடி பாலாஜி ஓபன்!
சென்னை: கரூரில் ஏற்பட்ட துயர சம்பவம் மொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது மட்டும் இல்லாமல், உயர் நீதிமன்றம் அமைத்த விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகரும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் பயணித்த தாடி பாலாஜி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதாவது அவர் பேசும்போது, " நடிகர் விஜய் தற்போது தான் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளார். அவரது கட்சியில் இருக்கும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் தான் இது குறித்து அவரிடத்தில் எடுத்துச் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு சொல்வது இல்லை. அதுதான் அந்த கட்சியில் உள்ள பிரச்னையே. விஜய்யின் மக்கள் இயக்கத்தில் இருந்த அவரது ரசிகர்கள் விஜய்க்கு மிகவும் விசுவாசமாக வேலை செய்யக் கூடியவர்கள்.
தற்போது இரண்டாம் கட்டத் தலைவர்களாக 20 பேரை தேர்வு செய்துள்ளார்கள். அப்படி இருக்கும்போது அவர்கள் தலைவர் விஜய்க்கும் தலைமைக்கும் விஸ்வாசமாக இருக்க வேண்டும். கட்சியில் பதவி வாங்குவது பெரிதல்ல. அதன் பின்னர் ஓடுகிற ஓட்டம் தான் பெரிதாக இருக்க வேண்டும். அந்த ஓட்டம் முழுக்க முழுக்க தலைவருக்காகவும் தலைமைக்காகவும் மக்களுக்காகவும் ஓட வேண்டும். தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களால் கட்சிக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

விஜய் தனித்து விடப்பட்டுள்ளார்: தலைவர் விஜய்க்கு பாதி பிரச்னைகள் தெரியவில்லை. அதாவது அவரது கவனத்திற்கு கொண்டு போகவில்லை. கரூர் பிரச்னை எவ்வளவு பெரிய பிரச்னை, இப்போது அவருக்குத் துணையாக நின்றிருக்க வேண்டும் தானே? ஆனால் யாருமே அவருடன் இல்லை. எல்லாரும் போய்விட்டார்கள், அவர் மட்டும் தனியாக அமர்ந்து கொண்டு மனக் குழப்பத்தில் இருக்கிறார். விஜய்யுடன் பழகியவனாக கூறுகிறேன், கரூர் சம்பவம் அவருக்கு மிகப்பெரிய வலியை ஏற்படுத்தி இருக்கும். இந்த பிரச்னையில் 100 சதவீதம் அவர் தனித்து விடப்பட்டுள்ளார்.
இதுதான் காரணம்: தற்போது அனைத்தையும் தனது பார்வையில் கொண்டு வரப் பார்க்கிறார். இதை முதலிலேயே செய்திருந்தால் பல விஷயங்களை தவிர்த்திருக்கலாம். விஜய்க்கு எல்லா தகவலையும் சொல்லாமல் விட்டதற்கு காரணம், இரண்டாம் கட்டத் தலைவர்களாக இருக்கக் கூடியவர்கள் தான் எல்லாமே என்று நினைத்துக் கொண்டு இருந்திருப்பார்கள். அதுதான் காரணமே. விஜய்யின் முகம் தான் கட்சியே. அப்படி இருக்கும்போது அவரிடத்தில் அனைத்தையும் சொல்ல வேண்டும் தானே.

இது எல்லாம் ஒரு பேச்சா?: மாவட்டச் செயலாளர்தான் எல்லா விசயத்தையும் செய்கிறார் எனும்போது அவரைக் கூட விஜய் இடத்தில் அறிமுகம் செய்து வைக்கவில்லை என்றால் எப்படி? இப்போது கூட பாருங்கள், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. மதியழகன் தான் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார், எனக்கும் அந்த நிகழ்வுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்வது ஒரு பேச்சா? இந்த மாவட்டச் செயலாளர் பின்னால் நின்று சப்போர்ட் செய்ய வேண்டும், ஆனால் நீங்கள் அதைச் செய்யாமல் இருக்கும்போது மற்ற மாவட்டச் செயலாளர்கள் அதை யோசிப்பார்களா இல்லையா? இந்த நிலையில் இருந்து கட்சி மீண்டும் வரும். அந்த வேலைகளை விஜய் செய்வார்" என்று பேசி உள்ளார். அவரது இந்த பேச்சு பலரது கவத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











