மழை தொடர்ந்தால் செட் காலி.. லாக்டவுனால் இதுவரை ரூ.5 கோடி நஷ்டம்.. 'தலைவி' தயாரிப்பாளர்கள் கவலை!
சென்னை: மழை தொடர்ந்தால் தலைவி படத்துக்காகp போடப்பட்டுள்ள செட் பாதிக்கப்படும் என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
Recommended Video
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை, தலைவி என்ற பெயரில் சினிமாவாக்கப்பட்டு வருகிறது.
விஜய் இயக்கும் இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக, இந்தி நடிகை கங்கனா ரனவத் நடிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ்
எம்.ஜி.ஆர். ஆக, அரவிந்த்சாமி, அவர் மனைவி ஜானகி ராமசந்திரனாக மதுபாலா நடிக்கின்றனர். ரோஜா படத்துக்கு பிறகு மதுபாலாவும் அரவிந்த் சாமியும் இதில் இணைந்துள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் சிங் தயாரிக்கின்றனர்.

பிரமாண்ட செட்
லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்காக, சென்னை மற்றும் ஐதராபாத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. லாக்டவுன் காரணமாக, கடந்த 6 வாரங்களாக இந்த செட் பயன்படுத்தப்படாமல் உள்ளன. இப்போது மழை பெய்து வருவதால், இந்த செட் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

விரைவில் முடிக்க
ஏற்கனவே லாக்டவுன் காரணமாக, நஷ்டத்தை சந்தித்து வரும் தயாரிப்பாளர்கள், அந்த செட் பாதிப்படைந்தால் மேலும் நஷ்டமாகும் என்று கவலை அடைந்துள்ளனர். இதுபற்றி தலைவி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான, ஷைலேஷ் ஆர்.சிங் கூறும்போது, 'செட்டில் நடக்கும் படப்பிடிப்புகளை விரைவில் முடிக்க திட்டமிட்டிருந்தோம். லாக்டவுன் காரணமாக அது முடியாமல் போய்விட்டது.

மவுண்ட்ரோடு
இப்போது மழையால் அந்த செட்கள் பாதிக்கப்பட்டால், கடினம்தான். மீண்டும் செட் அமைப்பது அதிகமான செலவை கொடுக்கும். லாக்டவுன் முடிந்து 10 நாள் கிடைத்தால் செட்டில் எடுக்கவேண்டிய காட்சிகளை முடித்துவிடுவோம்' என்று கூறியுள்ளார். ஐதராபாத்தில் உள்ள ராமகிருஷ்ணா சினி ஸ்டூடியோவில், நாடாளுமன்ற செட் அமைக்கப்பட்டுள்ளது. ஏவிஎம் ஸ்டூடியோவில் மவுண்ட் ரோட்டை அப்படியே உருவாக்கி இருக்கிறார்கள்.

5 கோடி நஷ்டம்
தயாரிப்பாளர் விஷ்ணுவர்தன் இந்துரி கூறும்போது, 'இன்னும் 40 சதவிகித படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது. எப்போது லாக்டவுன் முடியும் என்று தெரியவில்லை' என்று கூறியுள்ளார். லாக்டவுன் காரணமாக இதுவரை ஸ்டுடியோ வாடகை, செட் பராமரிப்பு உட்பட பல்வேறு விஷயங்களுக்காக, 'தலைவி' பட தயாரிப்பாளர்கள் ரூ.5 கோடி நஷ்டமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. லாக்டவுன் தொடர்ந்தால் நஷ்டம் இன்னும் அதிகமாகும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











