கொரோனா கால அறிவிப்பு.. சத்யராஜ் - கே.எஸ்.ரவிகுமார் படம் டிராப்.. திருப்பூர் சுப்ரமணியம் தகவல்!
சென்னை: கொரோனா காலகட்டத்தில், தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட படம் கைவிடப்பட்டுள்ளது என்று திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக, கடந்த வருடம் மார்ச் மாதம் தியேட்டர்கள் மூடப்பட்டன. சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன.
இதனால் சினிமா துறையை சேர்ந்தவர்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். பெரும் பொருளாதார இழப்பை சந்தித்தனர்.

சதவிகித அடிப்படை
அப்போது நடிகர்கள், இயக்குனர்கள், சதவிகித அடிப்படையில சம்பளம் வாங்கவேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள், தயாரிப்பாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த அடிப்படையில், படம் ஒன்றைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அனைத்து நடிகர்களும் நடிப்பது போல அந்த படத்தை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டது.

கே.எஸ்.ரவிகுமார்
சத்யராஜ் முக்கிய கேரக்டரிலும் கே.எஸ்.ரவிகுமார் இயக்கவும் பேசி முடிக்கப்பட்டது. கவுரவ வேடங்களில் விஜய் சேதுபதியும் பார்த்திபனும் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டனர். இந்தப் படத்தை ரூ.2 கோடியில் எடுக்க முடிவு செய்தனர். இந்த 2 கோடி ரூபாயும் 200 ஷேர்களாகப் பிரிக்கப்பட்டு தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

திருப்பூர் சுப்பிரமணியம்
கூட்டுத் தயாரிப்பாக படத்தைத் திட்டமிட்டார்கள். இது, திருப்பூர் சுப்பிரமணியம், பிரமிட் நடராஜன், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி ஆகியோர் மேற்பார்வையில் நடந்தது. 200 ஷேர்களுமே அறிவிக்கப்பட்டதுமே விற்றுத் தீர்ந்தன. இந்நிலையில் இந்தப் படம் டிராப் ஆகிவிட்டதாக திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

ரீமேக் உரிமை
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: கொரோனா அச்சுறுத்தல் ரொம்ப நீண்டுவிட்டதால் அந்தப் படத்தை தொடங்க முடியவில்லை. இதற்கு இடையில் ஒரு தெலுங்குப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கித்தான் அந்தப் படத்தைப் பண்ணலாம் எனத் திட்டமிட்டு இருந்தோம். ஆனால், அதே படத்தின் சாயலில்தான் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் வந்தது.

டிராப் செய்துவிட்டோம்
ஆகையால், வேறொரு கதையைச் செய்தோம். அது சரியாகப் பொருந்தி வரவில்லை. அதனால், இப்போதைக்கு கே.எஸ்.ரவிகுமார், சத்யராஜ் இணையும் படத்தை டிராப் செய்துவிட்டோம். இன்னும் யாரிடமிருந்தும் ஒரு பைசா கூட வாங்கவில்லை. படம் தொடங்கும்போது அனைவரிடமும் சொல்லித்தான் தொடங்கினோம். ஆகையால், கைவிட்டதையும் சொல்ல வேண்டுமே என்று சொல்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











