கொரோனா புதிய கட்டுப்பாடுகள்...தமிழகத்தில் நாளை முதல் தியேட்டர்கள் மூடல்
சென்னை : தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 14,000 ஐ கடந்துள்ளது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் ஏப்ரல் 26 முதல் தியேட்டர்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஊடரங்கிற்கு பிறகு, சுமார் 8 மாதங்களுக்கு பிறகு நவம்பர் மாதம் தியேட்டர்கள் திறக்கப்பட்டன.

நம்பிக்கை தந்த மாஸ்டர்
தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகு விஜய் நடித்த மாஸ்டர் படம், மீண்டும் மக்களை தியேட்டர்களுக்கு வரவழைத்தது. மாஸ்டர் படத்தின் வசூல், தியேட்டர் உரிமையாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. மாஸ்டரை தொடர்ந்து தியேட்டரில் ரிலீசான கார்த்தியின் சுல்தான் படமும் நல்ல வசூலை பெற்றது. சமீபத்தில் வெளியான தனுஷ் நடித்த கர்ணன் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தள்ளி போகும் படங்கள்
ஆனால் அதற்கு பிறகு தேர்தல், கொரோனா பரவல் உள்ளிட்ட பல காரணங்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கங்கனா ரணாவத் நடித்த தலைவி, சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் என பல படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

கேள்விக்குறியான படங்களின் ரிலீஸ்
மே மாதம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படுவதற்காக ஒத்திவைக்கப்பட்ட படங்களின் நிலை தற்போது, தியேட்டர்களை மீண்டும் மூட உத்தரவிட்டுள்ளதால் கேள்விக்குறியாகி உள்ளது. ஏற்கனவே கொரோனா பரவலால் தியேட்டர்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் முழவதுமாக தியேட்டர்களை மூட உத்தரவிட்டுள்ளதால் தியேடே்டர் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ஓடிடி நாட வேண்டிய கட்டாயம்
ஊரடங்கு எப்போது முடியும் என தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பல படங்கள் ஓடிடி தளத்தை நாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. தியேட்டரில் ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவை தயாரிப்பாளர்கள் பலர் மறுபரிசீலனை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











