தீ...தீ...தளபதி...இணையத்தை கலக்கும் விஜய் புகழ்பாடும் பாடல்
சென்னை : விஜய்யை கெளரவிப்பதற்காக இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் உருவாக்கப்பட்டுள்ள தீ...தீ...தளபதி பாடல் தான் இணையத்தில் செம ஹாட்டாக பரவி வருகிறது. விஜய் ரசிகர்களிடம் இந்த பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
விஜய்யின் தீவிர ரசிகர்கள் உலகம் முழுவதும் இருந்து வருகின்றனர். விஜய் ரசிகர்களால் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பும் உலகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் அரசியலில் தடம் பதித்து கலக்கி வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 100 க்கும் அதிகமான இடங்களை பிடித்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர்.

அரசியலில் விஜய் மக்கள் இயக்கம்
அடுத்தபடியாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தீரவிமாக களமிறங்கி இருக்கிறார்கள். அதுவும் மேயர், துணைமேயர் போன்ற வெயிட்டான பதவிகளுக்கு போட்டியிடுவதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். விஜய் மக்கள் இயக்கத்தினரின் அடுத்தடுத்த வெற்றிகளால் விஜய்யின் அரசியல் என்ட்ரி, அறிவிப்பு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

விஜய் ரசிகர்கள் உருவாக்கிய பாடல்
இந்நிலையில் விஜய் மீது கொண்ட தீராத பாசம் காரணம் கனடாவில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர், தீ தீ தளபதி என்ற ஆல்பத்தை வெளியிட்டுள்ளனர். அதிலும் பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜின் இசையில் க்யூட்டா சிரிச்சு மயக்குறான் என துவங்கும் இந்த பாடல் யூட்யூப் தளத்தில் வெளியிடப்பட்டு, செம டிரெண்ட் ஆகி வருகிறது. கனடா விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களே இந்த பாடலை எழுதி, பாடி, தயாரிக்கவும் செய்துள்ளனர்.

விஜய்க்காக இசையமைத்த முதல் பாடல்
இசையமைப்பாளர் பரத்வாஜ், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் அஜித்தின் காதல் மன்னன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதற்கு பிறகு அஜித் நடித்த அமர்க்களம், அட்டகாசம், திருப்பதி, அசல் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆனால் விஜய் நடித்த ஒரு படத்திற்கு கூட அவர் இசையமைத்ததில்லை. அதனால் விஜய்க்காக அவர் இசையமைக்கும் முதல் பாடல் இதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆல்பத்திற்கு பரத்வாஜை தேர்வு செய்து இசையமைக்க வைத்துள்ளனராம்.

இவங்க தான் இதற்கு காரணமா
இந்த பாடலை விஜய் மக்கள் இயக்கத்தின் செயலாளர் ஜனனி மற்றும் தலைவர் கார்த்திக் இணைந்து பாடி உள்ளனர். இந்த பாடலுக்கான வரிகளை எழுதியதும் கார்த்திக் தானாம். கனடா மற்றும் சென்னை தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து இந்த பாடலை உருவாக்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











