தெலுங்கில் "மெருபு" விடப்போகும் விஜய்
ஹைதராபாத்: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தெறி படத்திற்கு தெலுங்கில் மெருபு என்று படக்குழுவினர் பெயர் வைத்திருக்கின்றனர்.
புலி படத்திற்குப் பின்னர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தெறி. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சமந்தா, எமி ஜாக்சன், பிரபு, மகேந்திரன் மற்றும் மீனாவின் மகள் நைனிகா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.

பொங்கல் தினத்தில் வெளியாகலாம் என்று கூறப்படும் இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் தெலுங்குப் பதிப்புக்கு படக்குழுவினர் மெருபு என்று பெயர் வைத்திருக்கின்றனர். முன்னதாக தெலுங்கு நடிகர் ராம் சரணின் படத்திற்கு இந்தத் தலைப்பு வைக்கப்பட்டது.
தரணியுடன், ராம் சரண் இணையவிருந்த இப்படம் எதிர்பாராத விதமாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது விஜய்யின் தெலுங்கு பதிப்பிற்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











