சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருமுன் ரஜினியிடம் இதெல்லாம் கத்துக்கணும்! - எஸ்வி சேகர்
சென்னை: சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் ரஜினியிடம் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எஸ்வி சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் ரஜினி ஒரு பெரும் சக்தியாக உருவெடுப்பார் என கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்ப்பார்க்கப்பட்டாலும், அவர் தன் வருகையை இன்னும் நேரடியாக அறிவிக்காமல் உள்ளார். இந்த காத்திருப்புக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் முற்றுப்புள்ளி விழும் என்று ரஜினி தரப்பில் உறுதியாகச் சொல்லப்பட்டுள்ளது.

கமல் ஹாஸன்
இன்னொரு பக்கம் இருந்தாற்போலிருந்து நடிகர் கமல் திடுதிப்பென்று அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டார். இது நாள் வரை ட்விட்டரில் அரசியல் பேசி வந்த அவர், நேரடியாக இன்று களத்தில் குதித்து மக்களிடம் குறை கேட்க ஆரம்பித்துள்ளார்.

விஜய்
அந்தப் பக்கம் பார்த்தால் நடிகர் விஜய் ஒரு தலைவராக வருவார், மக்களுக்கு நல்லது செய்வார் என அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் பேட்டிகளில் கூறி வருகிறார். ஆனால் விஜய் மௌனம் காத்து வருகிறார்.

பிரகாஷ்ராஜ்
நான் ஏன் அரசியலுக்கு வரக் கூடாது... நானும் நிச்சயம் வருவேன்... மக்களுக்கு நல்லது செய்வேன் என்று கூறி, அவ்வப்போது மோடிக்கு எதிராகவும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அறிக்கை விட்டு வரும் நடிகர் பிரகாஷ் ராஜும் அரசியலில் குதிக்கக் காத்திருக்கிறார்.

ரஜினியின் நிதானம், பொறுமை
இந்த நிலையில் ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம் குறித்து அவ்வப்போது கருத்து கூறி வரும் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர், "சினிமா to அரசியலுக்கு வருமுன் ரஜினியிடம் கற்றுக் கொள்ள வேண்டியவை.. நிதானம், பொறுமை, சிறிய அறிக்கைகள், தேவையின்றி வீராப்பான எதிர்ப்பு. அவர் ஜெயிப்பார்," என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











