அடுத்த தியேட்டர் மூடல்... குடியிருப்பாக மாறுகிறது திருவான்மியூர் ஜெயந்தி!
அடுக்குமாடி குடியிருப்பாக மாறும் திரையரங்குகளின் பட்டியலில் திருவான்மியூரில் உள்ள ஜெயந்தி திரையரங்கமும் இபபோது சேர்ந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் சென்னையில் உள்ள பல திரையரங்குகள் அடுக்குமாடி குடியிருப்பாகவும், வணிக வளாகங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.

ஜெமினி பாலம் அருகில் இருந்த சன், அண்ணா சாலையில் இருந்த எல்பின்ஸ்டோன், வெலிங்டன், அலங்கார், ஆனந்த், சபையர் வளாகம், பாரகன், ப்ளாஸா, கெயிட்டி, சித்ரா என ஏகப்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன.
அதேபோல வட சென்னையின் பிரபல அரங்குகள் புவனேஸ்வரி, பாண்டியன், கிரவுன், ராக்ஸி, வாணி, வசந்தி போன்ற அரங்குகளும் மூடப்பட்டுவிட்டன.
திரையரங்குகளுக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதுதான் இதற்கு முக்கிய காரணம். மேலும் ஒப்பீட்டளவில் திரையரங்கு மூலம் வரும் வருமானத்தை விட, திருமண மண்டபங்கள் அல்லது குடியிருப்புகள் கட்டி விற்பதன் மூலம் வரும் வருவாய் பல மடங்கு அதிகம்.
சமீபத்தில்தான் பிரபலமான சாந்தி தியேட்டர் வளாகம் மூடப்பட்டது. விரைவில் அங்கு நான்கு திரைகளுடன் கூடிய மல்டிப்ளெக்ஸ் வருகிறது.
அடுத்து திருவான்மியூரில் எல்.பி. சாலையில் உள்ள ஜெயந்தி திரையரங்கம் மூடப்படுகிறது. அந்த அரங்கம் உள்ள 14 சென்ட் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.
இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது ஒலிம்பியா நிறுவனம்.


Click it and Unblock the Notifications











