கர்நாடகத்தில் தொடரி வெளியாகுமா?
காவிரிப் பிரச்சினையில் கன்னட வெறியர்களின் போராட்டம் தொடர்ந்து வருவதால், அங்கு தனுஷ் நடித்த தமிழ்ப் படமான தொடரி வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.
காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கர்நாடாகாவில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காவிரி விவகாரத்தால் இரு மாநிலங்களிடையே கடந்த 16-வது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், கர்நாடகாவில் தமிழ்ப் படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளன.

செப்டம்பர் 5 முதல் கர்நாடாகாவில் எந்தவொரு தமிழ்ப் படமும் வெளியாகவில்லை. இந்தச் சமயத்தில் புதிய தமிழ்ப் படங்களை வெளியிட்டால் வன்முறையாளர்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என திரையரங்கு அதிபர்கள் அஞ்சுவதால் தமிழ்ப் படங்களை வெளியிடாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விக்ரமின் இருமுகன் படம் கர்நாடகத்தில் வெளியாகவில்லை. இருமுகன் படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கு இந்தச் சிக்கல்களால் 2.5 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அடுத்து வெளியாகவுள்ள தொடரி, ரெமோ போன்ற படங்கள் கர்நாடகாவில் வெளியாவது கேள்விக்குறியாகியுள்ளது.
நேற்றைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு சில பகுதிகளில் ஓடிக் கொண்டிருந்த தமிழ்ப் படங்களும் நீக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தனுஷ் நடித்துள்ள தொடரி படமும் கர்நாடகாவில் நாளை வெளியாகவில்லை.
'எங்களுக்கு நஷ்டமானாலும் தற்போதைய சூழலில் தொடரி படத்தை கர்நாடகாவில் வெளியிடமுடியாது' என்று கர்நாடகா விநியோகஸ்தர் மஞ்சுதா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











