கடவுள் இருக்கிறாரா, இல்லையா? கடவுள் நம்பிக்கை குறித்து எச்.வினோத் நச் விளக்கம்!
சென்னை : கடவுள் நம்பிக்கை குறித்து இயக்குநர் எச் வினோத் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். அவரின் பதில் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
சதுரங்கவேட்டை,தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத், அஜித், போனிக்கபூருடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் துணிவு திரைப்படம் நாளை திரையரங்கில் வெளியாக உள்ளது. இன்று நள்ளிரவு ஒரு மணிக்கு சிறப்பு காட்சியாக படம் வெளியாக உள்ளது. துணிவு படத்தைப்பார்க்க ரசிகர்கள் போட்டி போட்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

அஜித்தின் துணிவு
வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த படத்தில், அஜித் கேங்ஸ்ட்ராக நடித்துள்ளார். இப்படத்தில், மஞ்சுவாரியர் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மஞ்சுவாரியர் அஜித்திற்கு ஜோடி இல்லை என்றாலும், அக்ஷன் காட்சிகளில் பின்னிபெடல் எடுத்து இருக்கிறார் மஞ்சுவாரியார். அசுரன் படத்திற்கு தமிழில் பல வாய்ப்புகள் வந்த போது, நல்ல கதைக்காக காத்திருந்து இப்படத்தில் நடித்தாக தெரிவித்திருந்தார்.

விறுவிறுப்பான ப்ரோமோஷன்
இத்திரைப்படம் நாளை வெளியாக உள்ளதால், இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். துணிவு திரைப்படம் தொடர்பாக நடிகை மஞ்சு வாரியரும், இயக்குநர் வினோத்தும் இணைந்தும் பல ஊடகங்களுக்கு படம் குறித்தும், படப்பிடிப்பின் போது நடந்த அனுபவங்களை பகிர்ந்துவருகின்றனர்.

கடவுள் இருக்கிறாரா, இல்லையா?
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த எச் வினோத்திடம் கடவுள் நம்பிக்கை குறித்து கேட்கப்பட்டது. இதுகுறித்து பேசிய எச் வினோத், இதுவரை 6 முறை மாலை போட்டு சபரிமலைக்கு சென்று இருக்கிறேன். கடவுள் இருக்கு இல்லை அந்த டாப்பிற்குள் நான் போக மாட்டேன். எனக்கு கடவுள் வேண்டுமா இல்லையா என்றால், எனக்கு கடவுள் நம்பிக்கை தேவைப்படுகிறது. ஏன் என்றால், கடவுள் இல்லாமல் வாழ்வதற்கு மிகப்பெரிய தெளிவும், தைரியமும் தேவைப்படுகிறது. அது என்னிடம் முழுமையாக இல்லை.

எனக்கு கடவுள் தேவை
என்னுடைய பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களில் இருந்த நான் மீண்டு வருவதற்கு எனக்கு கடவுள் தேவைப்படுகிறார். நான் கடவுளை நம்புவதால், மற்றவர்களுக்கு எந்த பிரச்சனையும் வரப்போவதில்லை. கடவுளை வைத்து வியாபாரம் செய்யவோ, கடவுளை வைத்து அதிகாரம் செய்யவோ, பிறரை வெறுக்கவோ, பிரிக்கவோ முயலும் போதுதான் கடவுள் பிரச்சனையாக மாறுகிறார். ஆனால், எனக்கு கடவுள் வந்து கணிதத்தில் வரும் 'X' போல, அந்த "X"யை வைத்து ஒரு கணக்கை முடிப்போம் அதுப்போலத்தான் எனக்கு கடவுள் என்று கடவுள் நம்பிக்கை குறித்து அழகாக விளக்கம் அளித்தார் எச் வினோத்.


Click it and Unblock the Notifications











