மீரா மிதுன் முதல் விஜய் சேதுபதி வரை.. சர்ச்சையாக பேசி 2020ஐ தெறிக்கவிட்ட டாப் 10 பிரபலங்கள்!
சென்னை: சர்ச்சையாக பேசி 2020 ஆம் ஆண்டை தெறிக்கவிட்ட பிரபலங்கள் குறித்த தொகுப்பை இன்றைய ஃபிளாஷ் பேக்கில் காணலாம்.
2020 ஆம் ஆண்டில் சினிமாத் துறையில் பல்வேறு ஏற்றத் தாழ்வுகள் இருந்தன. கொரோனாவால் சினிமாத்துறையே முற்றிலும் முடங்கியிருந்தது.
படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையிலும் சில பிரபலங்களின் பேச்சும் செயலும் சர்ச்சையாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. இதனால் பல பிரபலங்கள் அதிக விமர்சனத்துக்குள்ளானர்கள். அவர்களில் டாப் 10 பிரபலங்கள் குறித்த பிளாஷ் பேக்..

மீரா மிதுன்
2020ஆம் ஆண்டில் அதிகம் விமர்சனத்துக்குள்ளான நபர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடிப்பவர் மீரா மிதுன். நடிகர்கள், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார்களை எல்லாம் கோலிவுட் மாஃபியான என்று கூறி பரபரப்பை கிளப்பினார். விஜய், சூர்யா ரசிகர்கள் மீதிருந்த கோபத்தில் ஜோதிகா மற்றும் சங்கீதாவையும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி தீர்த்தார். இதனால் கடும் விமர்சனத்துக்குள்ளான மீரா மிதுனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வரை ஒட்டி அதகளப்படுத்தினர். இருந்தும் அடங்காத மீரா மிதுன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பலரும் தன்னை பார்த்து காப்பியடித்து போட்டோ ஷுட் நடத்துவதாக பரபரப்பை கிளப்பினார்.

நடிகை வனிதா
அடுத்து வனிதா, கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முதலே பிரபலமாக இருந்து வருபவர் வனிதா. இந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து பெரும் பிரபலமானார் வனிதா. பீட்டர் பாலுடன் லிப்லாக் போட்டோ, படுக்கையறை போட்டோ என நெருக்கமான போட்டோக்களை வெளியிட்டு அதிர வைத்தார். எலிசபெத் என்பவரின் கணவரான பீட்டர் பாலை வனிதா அபகரித்துக் கொண்டதாக மூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டார். ஆனால் திருமணம் ஆன 3 மாதங்களிலேயே குடிக்கு அடிமையான பீட்டருடன் வாழ முடியாது என அவரை பிரிந்தார்.

நடிகை கஸ்தூரி
அடுத்து நடிகை கஸ்தூரி, வனிதாவின் மூன்றாவது திருமணம் தொடர்பான சர்ச்சையில் சிக்கி அவரிடம் வாங்கிக்கட்டினார். பீட்டர் பாலின் மனைவியான எலிசபெத் ஹெலன், தனது கணவர் தனக்கு வேண்டும் என்று கூறி உதவி கேட்க சட்டப்பூர்வமான நடவடிக்கைளுக்கு கைக்கொடுத்தார் கஸ்தூரி. இதனால் கடுப்பான வனிதா கஸ்தூரியை விளாசி தள்ளினார். இருவருக்கும் இடையில் டிவிட்டரில் பெரும் போரே நடந்தது. இதேபோல் அஜித் ரசிகர்களுக்கும் நடிகை கஸ்தூரிக்கும் இடையிலும் டிவிட்டரில் பெரும் மோதல் வெடித்தது. மேலும் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் பங்கேற்றதற்கான சம்பளத்தை கொடுக்கவில்லை என்று கூறி விஜய் டிவியை விளாசி தள்ளினார் கஸ்தூரி. இதனாலும் அதிகம் பேசப்பட்டார் கஸ்தூரி.

லக்ஷ்மி ராமகிருஷ்ணன்
அடுத்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.. இயக்குநர் நடிகை நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டுள்ள லக்ஷ்மி ராமகிருஷ்ணன், வனிதா மூன்றாவதாக திருமணம் செய்த பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலனுக்கு அவருடைய கணவரை மீட்டுத்தர உதவுவதாக கூறினார். இதனால் ஆவேசமான வனிதா, இணையதள சேனலின் லைவ் பேட்டிய்ல லக்ஷ்மி ராமகிருஷ்ணனை அசிங்கம் அசிங்கமாக பேசினார். அவளே இவளே என்று தரக்குறைவாக பேசியதோடு அந்த வீடியோவை சேனலுக்கு முன்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து மேலும் அசிங்கப்படுத்தினார் வனிதா. இதனால் லக்ஷ்மி ராமகிருஷ்ணனும் அதிகம் விமர்சனம் செய்யப்பட்டார்.

நடிகர் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதியும் இந்த ஆண்டு அதிகம் விமர்சனங்களுக்கு உள்ளானார். அதாவது மாஸ்டர் படத்தின் போது விஜய் சேதுபதி மதம் மாறியதாக பரவிய தகவலை தொடர்ந்து, தனது சமூக வலைதள பக்கத்தில் போய் வேலைய பாருங்கடா என பதிவிட்டார். இதுபெரும் விமர்சனத்துக்குள்ளானது. அடுத்தப்படியாக, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இந்துக் கடவுள்கள் குறித்த இழிவாக பேசியதாக விமர்சனத்துக்குள்ளானார். தொடர்ந்து முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஒப்பந்தமானதால் பெரும் சர்ச்சைக்குள்ளானார் விஜய் சேதுபதி.

நடிகை ஜோதிகா
அடுத்து ஜோதிகா.. தஞ்சை பெரியகோவில் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கினார். அதாவது, தஞ்கை பெரிய கோவில் பராமரிக்கப்படும் அளவுக்கு அங்குள்ள மருத்துவமனை பராமரிக்கப்படவில்லை என்றார். மேலும் கோவிலுக்கு செலவு செய்யும் தொகையை மக்கள் பள்ளிக்கூடங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்றார். விருது நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஜோதிகா பேசிய இந்த பேச்சுக்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரத்தால் ஜோதிகாவும் இந்த ஆண்டு அதிக விமர்சனத்துக்குள்ளனார். ஆனால் தான் குறை சொன்ன அதே மருத்துவமனைக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பில் மருத்துவ உபகரணங்களை வாங்கி கொடுத்து நெகிழச் செய்தார்.

ரகுல் பிரீத்சிங்
தமிழ் சினிமாவில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். சூர்யாவின் என்ஜிகே படத்திலும் நடித்துள்ளார். தற்போது சிவ கார்த்திகேயனின் அயலான், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட் படங்களிலும் நடித்து வரும் ரகுல், சுஷாந்த் மரணத்திற்கு பிறகு வெடித்த போதை பொருள் சர்ச்சையில் சிக்கினார். அவரது வீட்டில் இருந்து போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் சுஷாந்தின் காதலியான ரியா சக்கரவர்த்திக்கு சொந்தமானது என்று கூறினார். மேலும் தான் போதை பொருள் பயன்படுத்தியதாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீதும் டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் ரகுல். இதனால் இந்த ஆண்டில் தமிழ் சினிமாவில் பெரும் விமர்சனத்துக்குள்ளான நடிகையாக பார்க்கப்பட்டார் ரகுல் பிரீத் சிங்.

பாலாஜி முருகதாஸ்
இதேபோல் பிக்பாஸ் பிரபலங்களும் இம்முறை அதிக விமர்சனத்துக்குள்ளானார்கள். அந்த வகையில் பாலாஜி முருகதாஸ், தனது அப்பா அம்மா குடிகாரர்கள் என்றும் தனக்கு சிறு வயதில் இருந்தே எதுவும் கிடைக்கவில்லை என்று கூறியும் கண்ணீர் விட்டார். ஆனால் அவர் சொன்னது பொய் என்பது அடுத்த சில நாட்களிலேயே அம்பலமானது. தொடர்ந்து நிகழ்ச்சியிலும் சுரேஷ் சக்கரவர்த்தி, சனம் ஷெட்டி, ஆரி என சக போட்டியாளர்களை தரக்குறைவாக பேசினார். இதனால் அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்றும் குரல்கள் ஒலித்தன.

சனம் ஷெட்டி
அடுத்து சனம் ஷெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதிகம் பேசப்பட்ட போட்டியாளர்களில் இவரும் ஒருவர். சனம் ஷெட்டி தனது காதலரான தர்ஷன், தன்னுடன் நிச்சயதார்த்தம் செய்துவிட்டு தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக கூறி போலீஸில் புகார் அளித்தார். மூன்று வருடங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்துவிட்டு தன்னை ஏமாற்றி விட்டதாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார். தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் தன்னைவிட வயதில் மூத்தவாரான சுரேஷ் சக்கரவர்த்தியை அவனே இவனே என்றும் போடா வாடா என்றும் பேசினார். இதனால் சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டார் சனம் ஷெட்டி.
Recommended Video

அர்ச்சனா
அவரை தொடர்ந்து அதிகம் விமர்சனத்துக்குள்ளானவராக அர்ச்சனா கூறப்படுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அர்ச்சனா, தான்தான் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என்பதை போல நடந்துகொண்டார். இதனால் கமலின் கோபத்திற்கு ஆளானார். அவரது நடவடிக்கைகளை பார்த்த கமல் நீங்கள் ஆங்கரிங் பண்ண வரவில்லை நீங்களும் ஒரு போட்டியாளர்தான் என்று ஞாபகப்படுத்தினார். தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் தரக்குறைவான வார்த்தைகளையும் பயன்படுத்தினார் அர்ச்சனா. இதனால் சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றப்பட்டார் அர்ச்சனா.


Click it and Unblock the Notifications











