"உப்பி"யிடம் வாலாட்டும் சிம்புவும், வாசுவும் சரவணனும்...!
பெங்களூர்: நாளை தமிழ்நாட்டில் சிம்புவின் வாலு மற்றும் ஆர்யாவின் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க ஆகிய 2 படங்களும் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் மோதுகின்றன.
அதே போல கர்நாடகாவிலும் கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திராவின் படமும், மற்றொரு கன்னட நடிகரான கணேஷின் படமும் மோதுகின்றன. மேலும் பெங்களூரில் இந்த இருவரின் படங்களைத் தவிர சிம்புவின் வாலு, ஆர்யாவின் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க மற்றும் அக்சய் குமாரின் பிரதர்ஸ் போன்ற படங்களும் பெங்களூரில் வெளியாகின்றன.
2 கன்னடப் படங்கள், 2 தமிழ்ப் படங்கள் மற்றும் ஒரு ஹிந்திப் படம் என்று நாளை ஒரே நாளில் மொத்தம் 5 திரைப்படங்கள் பெங்களூரில் மோதவிருக்கின்றன. இதில் வெற்றிக்கனியை பறிக்கப் போவது யார் என்பது தெரியவில்லை.
யார் வெற்றி பெறுவார்கள் என்பது நாளை மாலை தெரிந்துவிடும், அதற்குமுன் நாம் நாளை வெளியாகும் இந்த 5 படங்களைப் பற்றியும் பார்த்து விடலாம்.

உப்பி 2
கன்னடத்தின் சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் உபேந்திராவின் உப்பி 2 திரைப்படம் நாளை பெங்களூர் முழுவதும் சுமார் 100 திரையரங்குகளில் வெளியாகின்றது. நீண்ட இடைவேளைக்குப் பின் நடிகர் உபேந்திரா தானே இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் உப்பி 2, 1999 ம் ஆண்டு வெளிவந்த உபேந்திரா படத்தின் தொடர்ச்சி தான் நாளை வெளியாகும் உப்பி 2. சைக்காலஜி கலந்த த்ரில்லராக உருவாகியிருக்கும் உப்பி 2 திரைப்படத்தை காண சாண்டல்வுட்டின் மொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

உப்பி 2 அதிகரிக்கும் திரையரங்குகள்
உப்பி 2 வுக்காக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு தனது ஸ்ரீமந்துடு திரைப்படம் பெங்களூரில் வெளியாவதை 1 வாரம் தள்ளிவைத்தது குறிப்பிடத்தக்கது. 100 திரையரங்குகளில் வெளியாகும் உப்பி 2 நாளை மாலைக்குள் 130 திரையரங்குகளாக அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புகுரி
மற்றொரு கன்னட நடிகரான கணேஷ் நடிப்பில் நாளை வெளியாகவிருக்கும் மற்றொரு திரைப்படம் புகுரி, கணேஷின் 25 வது திரைப்படமாக வெளியாகும் புகுரி நாளை கர்நாடகா முழுவதும் சுமார் 50 திரையரங்குகளில் வெளியாகிறது. நாளை மாலை முடிவில் திரையரங்குகளின் எண்ணிக்கை 70 ஆக அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாலு
சிம்பு - ஹன்சிகா நடிப்பில் காமெடி + காதல் கலந்து தமிழில் உருவாகியிருக்கும் வாலு திரைப்படம் நாளை பெங்களூரில் 32 திரையரங்குகளில் வெளியாகிறது. நாளை படம் வெளியாகும் முன்பு திரையரங்குகளின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்தால் தயாரிப்பாளர் சந்தோஷப்படலாம் அப்படி ஒரு சூழ்நிலை உருவாகுமா? பார்க்கலாம்.

வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க
ஆர்யா, தமன்னா, சந்தானம் நடிப்பில் காமெடி கலந்து உருவாகியிருக்கும் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க திரைப்படம் ஆச்சரியம் தரும் விதமாக வாலுவை விட அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சுமார் 43 திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படம் நாளை வெளியீட்டிற்கு முன்பு 60 திரையரங்குகளை நெருங்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

பிரதர்ஸ்
அக்சய் குமார், சித்தார்த் மல்கோத்ரா மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் பிரதர்ஸ் திரைப்படம்நாளை பெங்களூர் முழுவதும் சுமார் 145 திரையரங்குகளில் வெளியாகின்றது. உபேந்திராவின் உப்பி 2 வை விடவும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் பிரதர்ஸ் நாளை மாலைக்குள் சுமார் 160 திரையரங்குகளாக அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
5 படங்களும் மோதுவதால் பெங்களூர் பாக்ஸ் ஆபிசில் போட்டி பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்க்கப் படுகிறது, பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











