எலி எந்தப் பக்கம் வேணும்னாலும் தாவும்ணே..!- வடிவேலு
மீண்டும் சினிமாவில் நடிப்பதில் பிஸியாகியுள்ள வடிவேலு, தனது அரசியல் மறுபிரவேசம் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்று கூறியுள்ளார்.
தெனாலிராமனுக்குப் பிறகு வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள ‘எலி' படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை கிரீன் பார்க்கில் நடந்தது.
இதில் வடிவேலு, இயக்குனர் யுவராஜ் தயாளன், தயாரிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

சிரிப்பு படம்
நிகழ்ச்சியில் வடிவேலு பேசுகையில், "இந்த படம் கண்டிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதமாக இருக்கும். முழுக்க முழுக்க நகைச்சுவையாக படத்தை எடுத்திருக்கிறோம். கொத்துக்கொத்தாக வந்து இந்த படத்தை பார்த்து குலுங்க குலுங்க சிரிப்பார்கள்.

ஏன் எலி?
எலி என்று இந்தப் படத்துக்குப் பெயர் வைக்கக் காரணம் இருக்கிறது. எலி ஒரு இடத்தில் நிற்காது. அதே மாதிரி என்ன நடந்தாலும் முதலில் காட்டிக் கொடுத்துவிடும் எலி. சுனாமி, பூகம்பம், மழை, காற்று என இயற்கையாக நடப்பதை முன்பே அறிந்து வெளியில் வந்து பரபரப்பாக ஓடும் எலி. படத்தில் எனக்கு அப்படி ஒரு வேடம் என்பதால் இந்தப் படத்துக்கு அந்த தலைப்பை வைத்தோம்.

சதா
இந்த படத்தில் சதா எனக்கு ஹீரோயினாக நடித்திருக்கிறார். அவருடன் எனக்கு பாடல் காட்சிகளும் உண்டு. 1960-70 காலக்கட்டம் என்பது ஆங்கிலத்தை நாம் கற்றுக்கொள்ள தொடங்கிய காலம். ஆகவே, இந்த படத்தில் ஆங்கிலத்தை தப்பும் தவறுமாக பேசும் காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருக்கும்.

வாய்ப்புகள் வந்தன...
எனது முந்தைய படத்திற்கும் இந்த படத்திற்கும் பெரிய இடைவெளி ஏற்பட்டதற்கு எதுவும் காரணம் இல்ல. ஒரு நல்ல தரமான படத்தை கொடுப்பதற்காகத்தான் இவ்வளவு காலம் எடுத்துக் கொள்ள வேண்டியதாகிவிட்டது. இடைப்பட்ட காலத்தில் ட்ராக் காமெடி வாய்ப்புகள் நிறைய வந்தாலும், இருப்பினும், இந்த படத்தை முடித்து கொஞ்சம் பெரிசாக வெளியில் வந்தபிறகுதான் மற்ற படங்களை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.

இனி ட்ராக்கும் உண்டு
வந்த வாய்ப்புகளை ஒப்புக் கொண்டு காமெடி ட்ராக் பண்ணியிருந்தால், படம் காணாம போயிரும். ட்ராக் மட்டும் தனியா நிற்கும். அது வேணாம் என்றுதான் முதலில் எலி பண்ணேன். படம் எனக்கு திருப்தியை கொடுத்துள்ளது. அதனால் இனிமேல் காமெடி வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன்," என்றார்.

அரசியலில் மீண்டும் குதிப்பீர்களா?
சந்திப்பின் முடிவில், சட்டமன்றத் தேர்தல் வந்துவிட்டது. மீண்டும் அரசியல் பிரவேசம் உண்டா? என்ற கேள்விக்கு பதிலளித்த வடிவேலு, "அதுபற்றி இப்போ எதுவும் சொல்ல முடியாதுண்ணே. இப்போதைக்கு சினிமா கடையைத் திறந்து விட்டிருக்கிறேன். அந்த கடைய (அரசியல்) மூடி வச்சிருக்கேன். இது நல்லாத்தான் போகுது. பார்ப்போம்... எலி எந்தப் பக்கம் தாவும்னு சொல்ல முடியாதுண்ணே.. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்," என்றார்.


Click it and Unblock the Notifications