கின்னஸ் சாதனை படைத்த பாடகி சுசீலாவுக்கு புத்தர் சிலை பரிசளித்த வைரமுத்து

By Shankar

அதிக பாடல்கள் பாடியதற்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற பி சுசீலாவுக்கு புத்தர் சிலையை பரிசாக வழங்கினார் கவிஞர் வைரமுத்து.

பின்னர் அவர் கூறுகையில், "17595 பாடல்கள் பாடி கின்னஸ் - உலக சாதனை பதிவேட்டில், பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்கள் இடம்பெற்றிருப்பது, அவருக்கு மட்டும் பெருமை அல்ல, உலகத்திலேயே அதிகமாக பாடல்களை பாடிய பாடகி இந்தியாவில் இருக்கிறார் என்பதால் அது இந்தியாவிற்க்கே பெருமை. அவர் தமிழ்நாட்டு தலைநகரத்தில் வாழ்கிறார், தமிழ் பாட்டு பாடுகிறார், தமிழர்களோடு வாழ்கிறார் என்பது தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை. பாடகி பி.சுசிலா அம்மையார் புகழை காலம் தாழ்ந்து நாம் பதிவு செய்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.

Vairamuthu's gift to Guinness record holder P Suseela

எத்தனை மொழிகளில் பாடினாலும், அத்தனை மொழிகளிலும் துல்லியம், அழகு, மேன்னை முன்றையும் கொண்டு வரும் ஆற்றல் பாடகி பி.சுசிலா அம்மையாருக்கு உண்டு. நம் அத்தனை பேருக்கும் ஒரே ஒரு தாய்மொழிதான் உண்டு, ஆனால் பாடகி பி.சுசிலா அம்மையாருக்கு 7 தாய்மொழிகள். அவை தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம் மற்றும் ஒரியா. 7 மொழிகளை தாய் மொழிகளாக கொண்டதைப் போல் பாடுபவர் பாடகி பி.சுசிலா அம்மையார்.

1953ல் தனது முதல் பாடலை பாடினார், அந்த ஆண்டு தான் நான் பிறந்தேன். இதற்கு என்ன காரணம் என்றால், என்னை போன்றவர்களுக்கு அவர் பாடிய பாட்டுதான் தாலாட்டாக இருக்கவேண்டும் என்று காலம் விதித்திருக்கிறது. அவரது தமிழ் பாடல்களில் உள்ள உச்சரிப்பின் துல்லியம், தமிழின் மேன்மை, சொற்களின் சுத்தம் ஆகியவை அவருக்கு மட்டுமே உரியது. உதாரணத்திற்கு, மலர்ந்தும் மலராத பாதி மலர் போல என்ற பாட்டில் சொற்களை மட்டும் அல்ல, ஒலிக்குறிப்பை கூட பாடியிருக்கிறார், விசும்பலை பாடியிருக்கிறார்.

Vairamuthu's gift to Guinness record holder P Suseela

எனக்கும் மிகவும் பிடித்த "என்ன நினைத்து என்னை அழைத்தாயோ..." என்ற பாடல், படத்தோடு பார்க்கையில் கண்ணீர் வரும், அப்படியென்றால நடித்தவர்கள் அழ வைக்கிறார்கள் என்று அர்த்தம். அந்த பாட்டை செவியில் கேட்டாலும் அழுகை வரும், அப்படியென்றால் சுசிலா நம்மை அழ வைக்கிறார் என்று அர்த்தம். அப்படியெல்லாம் இந்த மண்ணுக்கு புகழை சேர்த்தவர் பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்கள்.

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் மற்றொன்று "கண்ணுக்கு மை அழகு..." பாடல். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த பாடலை யார் வைத்து பாட வைக்கலாம் என்று கேட்டார். அதற்கு நான், உங்களது இசையில் பாடகி சுசிலா அம்மையார் பாடவேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு, அதற்கு பொருத்தமான பாட்டு இதுதான் என்றேன். ஏன் இந்த பாட்டு பொருத்தம் என்று அவர் கேட்டார். தமிழுக்கு சிறப்பான 'ழ' எழுத்து இப்பாட்டில் அதிகம் வருகிறது, அந்த 'ழ' எழுத்தை உச்சரிப்பதில் பாடகி சுசிலா அம்மையாருக்கு இணை அவர் மட்டுமே என்றேன். தமிழுக்கு சிறப்பு 'ழ'கரம், இசைக்கு சிறப்பு பாடகி சுசிலா அம்மையார்.

பாடகி சுசிலா அம்மையாரின் வரலாறு மிகப் பெரிது, 1950களில் பாட வந்தவர் சுசிலா. பல இயக்குனர்கள், பாடலாசிரியர்கள், தயாரிப்பாளர்கள், நடிகைகள், ரசிகர்கள், தலைமுறைகள் என அனைத்து மாறி இருக்கிறது. இத்தனையும் தாண்டி முன்று தலைமுறைக்கு தனது இசை பங்களிப்பை செய்தவர் சுசிலா அம்மையார்.

இசை என்பது பயிற்சியால் வந்துவிடும், குரல் என்பது இயற்கையின் கொடை. அந்த இயற்கையின் கொடையாக தனக்கு வழங்கப்பட்ட குரலை இந்திய மக்களுக்கெல்லாம் மகிழ்ச்சிப்படுவதற்கும், அமைதிபடுவதற்கும், அன்பு செலுத்துவதற்க்கும் பயன்படுத்தி இருக்கிறார்.

இவரின் குரல் இல்லையென்றால் பல பேருக்கு காயங்கள் ஆறி இருக்காது. பலரது கண்ணீரை துடைத்த குரல், பலரை நிம்மதியாக உறங்க வைத்த குரல், பலரை காதலிக்க வைத்த குரல், பலரது சண்டைகளை தீர்த்து வைத்த குரல், பல மேடைகளில் தாலாட்டிய குரல், சுசிலா அம்மையாரின் குரல். இவரது குரல் இந்த சமுகத்திற்கு செய்த பணி மிகப்பெரியது. இவரின் குரலால் காற்று தன்னைத்தானே தாலாட்டிக்கொண்டு தூங்கவைத்துக் கொள்கிறது என்று சொல்லவேண்டும். சுசிலா அம்மையாரின் தலைமுறை தாண்டிய குரலுக்கு எனது தலைவணக்கத்தை நான் தெரிவித்து கொள்கிறேன்.

பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும், உயர்ந்த புகழை பெற வேண்டும், இவர் வாழும் காலத்தில் நாமெல்லாம் வாழ்கிறோம் என்பதே நமக்கு பெரிய பெருமை. வாழும் காலத்திலேயே பெருமை எல்லோரையும் தேடி வாராது, அந்த பெருமை பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்களுக்கு வந்திருக்கிறது. அவரால் இந்தியா பெருமை பெருகிறது. தமிழ் கலை பெருமை பெருகிறது. உலகம் முழுவதும் இருக்கும் ரசிக பெருமக்கள் என் மூலமாக அவருக்கு வாழ்த்து சொல்கிறார்கள்," என்றார்.

Vairamuthu's gift to Guinness record holder P Suseela

வைரமுத்துவுக்கு நன்றி தெரிவித்து பி சுசீலா கூறுகையில், "என் அன்பார்ந்த ரசிகர்களுக்கும், கலைஞர்களுக்கும், பாடகர் பாடகிகளுக்கும், இசையமைப்பாளர்களுக்கும் மற்றும் என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Vairamuthu's gift to Guinness record holder P Suseela

சில நாட்களுக்கு முன் சிலோனுக்கு என்னை அழைத்து, எனக்கு கம்பன் விருது கொடுத்து கவுரவித்தனர். அந்நேரத்தில் ஒரு விட்டின் வாசலில் புத்தர் சிலையை கண்டு அதை என் விட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் சற்றும் எதிர்பாரவிதத்தில் கவிஞர் வைரமுத்து எனக்கு இன்று புத்தர் சிலையை பரிசளித்தது மிகவும் ஆச்சர்யமாகவுள்ளது," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X