அஜித் ரசிகர்களை அதகளம் செய்ய வைக்கும் வேதாளம் படத்தின் 'தெறி' வசனங்கள்!
சென்னை: அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் பல டயலாக்குகளை வேதாளத்தில் வைத்து தெறிக்கவிட்டுள்ளார் இயக்குநர் சிறுத்தை சிவா.
தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களை கொண்டுள்ள நடிகர்களில் ஒருவர் அஜித். ரஜினி, அஜித், விஜய் போன்றோர் மாஸ் ஹீரோவாக அறியப்படுகிறார்கள். கமல், சூர்யா, விக்ரம் போன்றோர் நடிப்பில் பல மாற்றங்களை செய்துகொண்டிருப்பதால் அனைத்து படங்களிலும் மாஸ் ஹிரோவாக முன்னிருத்த முடியாத நிலை.
அஜித்தும், சில வருடங்களுக்கு முன்பாக, தன்னை நடிப்பில் முன்னிருத்துவதா, அல்லது மசாலா மாஸ் ஹீரோவாக முன்னிருத்துவதா என்ற குழப்பத்தில் இருந்தார். இதனால் சில படங்கள் காலை வாரின. இதன்பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க மாஸ் பாதையை தேர்ந்தெடுத்தார்.

மாஸ் ஹீரோ
ஆரம்பம், மங்காத்தா, வீரம் போன்றவை அவரது ரசிகர்களின் மாஸ் பசிக்கு தீனி போட்டன. இதனால் படங்கள் வெற்றியும் பெற்றன. அதே பாணியில்தான் வேதாளமும் வெளியாகியுள்ளது. அஜித் ரசிகர்களை வெறியேற்றி, தெறிக்கவிட்ட சில டயலாக் சீன்களை பாருங்கள்.

கார் ஓட்ட தெரியுமா?
அஜித்தை டிரைவராக சேர்ப்பதற்காக இன்டர்வியூ வைக்கிறார் சூரி. அப்போது ஒரு கேள்வி, "உனக்கு கார் ஓட்ட தெரியுமா?". இந்த கேள்விக்கு பிறகு சில விநாடிகள் பேசாமலே சூரியை பார்த்து லுக் விடும் அஜித், 'தெரியும்' என்கிறார். பந்தைய கார் ஓட்டிய அனுபவம் உள்ளவர் அஜித். எனவே அஜித்தின் கார் ஓட்டும் திறமைக்காக ரசிகர்கள் கைதட்ட வேண்டும் என்று அந்த கேள்வியை போட்டுள்ளார் இயக்குநர்.

முதுகில் குத்தியவர்கள்
வேதாளம் அஜித் கதாப்பாத்திரத்தை எதிரி கோஷ்டி தாக்கிவிட்டு தப்பியோடுகிறது. காப்பாற்ற முயலுகிறார் லட்சுமி மேனன். காப்பாற்றாதே, போய்விடு என்கிறார் அஜித். ஆனால் லட்சுமி மேனன் கேட்கவில்லை. மேலும், "உங்கள் முதுகில் குத்தியுள்ளனர்" என்று லட்சுமி மேனன் பதற்றத்தோடு ரத்தத்தை தொட்டு பார்த்து சொல்கிறார். அஜித் பதிலுக்கு "என்னை நிறைய பேர் முதுகில் குத்தியுள்ளனர்" என்கிறார். திரையுலகில் அவர் சந்தித்த மோசமான அனுபவத்தை நினைவுபடுத்தும் டயலாக் அது. இந்த டயலாக்கின்போது, விசிலால் அரங்கம் அதிர்கிறது.

சொம்பு 'சுறா'
வேதாளம் கதாப்பாத்திர, அஜித்திடம் பல ரவுடிகள் 'தொழில்'கற்றதை பெருமையாக சொல்வது போல ஒரு காட்சி. அதில் ஒரு ரவுடி சொல்கிறார். "சாதாரண சுறாவாக இருந்த என்னை, சொம்பால அடிச்சி, அடிச்சி, சொம்பு சுறாவா மாற்றினது நீதானண்ணே" என்கிறார். 'சுறாவை', வேதாளம் அடித்ததாக வரும் டயலாக்கை கேட்டதும் அஜித் ரசிகர்களுக்கு அப்படி ஒரு ஆனந்தம்.

தேடி அடிக்கிற ஆள்
வில்லன் கதாப்பாத்திரம் அஜித்தை பற்றி இப்படி சொல்கிறது: 'அவன் ஓடி ஒளியிற ஆள் இல்லை, தேடி அடிக்கிற ஆள்'. கிளைமேக்சில் அஜித் கதாப்பாத்திரம் கூறுகிறது "நான் பணத்துக்காகவே எதையும் செய்வேன், பாசத்துக்காக செய்ய மாட்டேனா?"

கேடுகெட்டவன்
அஜித் பேசும் மற்றொரு வசனம். "நீ கெட்டவன்னா, நான் கேடுகெட்டவன்டா". மேலும், மங்காத்தா படத்தை போலவே, வேதாளம் படத்தில் ஆங்காங்கே, 'தல' என்ற வார்த்தை வலிந்து திணிக்கப்பட்டுள்ளது. இதுவும் ரசிகர்களை கவரும் யுத்தியாக மாறியுள்ளது. எல்லாத்துக்கும், ஹைலைட் பஞ்ச் "தெறிக்கவிடலாமா" ஒரு நிமிடம் தியேட்டரே தெறிக்கிறது.

சீற வைக்கும் டயலாக்குகள்
"திட்டம்போட்டு நடக்குறவனுக்கு அவன் மட்டும்தான் துணை. திட்டம்போடாமல் போறவனுக்கு ஆண்டவே துணை", "பணத்தை பற்றி தெரிஞ்சி வச்சிருக்கீங்க. என் குணத்தை பற்றி தெரியலியே", "பணத்துக்காக நான் எதையும் செய்வேன், ஆனா தன்மானத்துக்கு ஒரு பிரச்சினை என்றால்.." என்பது போன்ற மேலும் பல டயலாக்குகளும் அஜித் ரசிகர்களை சீறவிட்டுக்கொண்டே உள்ளன.

பொண்ணுங்கள முன்னேறவிடுங்க
பஞ்ச் டயலாக்குகளை தவிர, ஏகப்பட்ட கருத்து வசனங்களையும் சிவா காட்சிகளில் புகுத்தியுள்ளார். "பொண்ணுங்க படிச்சி முன்னேறட்டும். அவங்க முன்னேறாததற்கு காரணமே ஆண்கள் பின்னாடி வருகிறார்களே என்ற பயம்தான்", "பொண்ண கட்டிக்குடுக்குறது வீட்டுல உள்ள பொம்பளைங்களையும் நம்பித்தான்" "ஆம்பளைய காப்பாற்றினா அவன மட்டும்தான் காப்பாற்றின மாதிரி. பொண்ணை காப்பாற்றினால் ஒரு பரம்பரையவே காப்பாற்றிய மாதிரி" போன்ற டயலாக்குகள் பெண்களை தூக்கி வைத்து கொண்டாடுகின்றன.


Click it and Unblock the Notifications











