தியேட்டர் பிரச்சினையால்.. வேதாளம் சாதனையை முறியடிக்கத் தவறியது விஜய்யின் தெறி
சென்னை: தியேட்டர் பிரச்சினையால் 'வேதாளம்' படத்தின் முதல்நாள் வசூலை முறியடிக்க விஜய்யின் 'தெறி' தவறி விட்டது.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் நேற்று வெளியான தெறி படத்திற்கு விஜய் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
ஒருபுறம் கட்-அவுட் சரிந்தாலும் மற்றொருபுறம் புதிதுபுதிதாக கட்-அவுட்களை உருவாக்கி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கத்தி, லிங்கா
கடந்த ஆண்டு அஜீத், லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 'வேதாளம்' முதல் நாளில் சுமார் 15.5 கோடிகளை தமிழ்நாட்டில் வசூலித்து சாதனை புரிந்தது. இதன்மூலம் ரஜினி நடிப்பில் வெளியான 'லிங்கா' மற்றும் விஜய் நடிப்பில் வெளியான 'கத்தி' ஆகிய படங்களின் வசூலை வேதாளம் முறியடித்திருந்தது.

தெறி
'வேதாளம்' படத்தின் ஓபனிங் வசூலை விஜய்யின் 'தெறி' முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்தது. ஆனால் 'வேதாளம்' வசூல் சாதனையை முறியடிக்க 'தெறி' தவறிவிட்டது. நேற்று முதல்நாளில் இப்படம் 12.5 கோடிகள் வரை வசூலித்து இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.,

காரணம் என்ன
மிகப்பெரிய எதிர்பார்ப்பு தெறிக்கு இருந்தும் கூட, வேதாளம் சாதனையை இப்படம் முறியடிக்காதது விஜய் ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தெறி வசூல் சாதனையைத் தவற விட தியேட்டர் பிரச்சினையே முக்கியக் காரணம். தியேட்டர்களில் டிக்கெட் விலையை அதிகம் வைத்து விற்கக் கூடாது என்ற அரசின் உத்தரவால், நிறைய தியேட்டர்களில் தெறி வெளியாகவில்லை. குறிப்பாக செங்கல்பட்டு பகுதிகளில் ஏராளமான தியேட்டர்கள் தெறியை எடுக்கவில்லை. பேச்சுவார்த்தை நடத்தியும் கூட படத்தை வெளியிட தியேட்டர்கள் மறுத்து விட்டன.

ரசிகர்கள் பிரச்சினை
இதனால் செங்கல்பட்டு பகுதிகளில் ரசிகர்கள் சாலை மறியல் செய்து போராட்டம் நடத்தியுள்ளனர். எனினும் 2 வது நாளாக இருவர் தரப்பிலும் இதற்கான பேச்சு வார்த்தைகளில் சமரசம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் படத்தின் ஓபனிங் மட்டுமின்றி வசூலும் கணிசமாக பாதிக்கலாம் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











