பஞ்ச் டயலாக்குடன் குடியரசு தினத்தில் வெளியாகிறது விஜய்யின் 'தெறி' டீசர்!
சென்னை: விஜய்யின் தெறி டீசரை வருகின்ற குடியரசு தினத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'தெறி' படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து படத்தின் டீசரை வருகின்ற குடியரசு தினத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். சுமார் 50 நொடிகள் ஓடக்கூடிய இந்த டீசர் விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும் என்று கூறுகின்றனர்.
மேலும் இந்த டீசரில் விஜய்க்கு ஒரு பஞ்ச் டயலாக்கும் இருக்கிறதாம். முன்னதாக இப்படத்தின் டீசரை பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர்.
ஆனால் எதிர்பாராதவிதமாக படப்பிடிப்பு தள்ளிப் போனதால் தற்போது குடியரசு தினத்தில் இந்தப் படத்தின் டீசரை வெளியிடுகின்றனர்.
படத்தின் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் "தெறி படத்தின் டீசர் வேலைகள் தொடங்கி விட்டன. கொண்டாட்டம் ஆரம்பம்" என்று பதிவிட்டு இந்தத் தகவலை உறுதி செய்திருக்கிறார்.
ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் பர்ஸ்ட் லுக் அதிகரித்து இருந்தது.
இந்நிலையில் தற்போது வெளியாகக் கூடிய டீசர் பல்வேறு சாதனைகளை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுவரை வெளியான விஜய் படத்தின் டீசர்களை தெறி முறியடிக்குமா? என்ற கேள்வியும் தற்போது எழுந்திருக்கிறது.
இந்தப் படத்தில் விஜய் நேர்மையான ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். போக்கிரி, ஜில்லா படங்களைத் தொடர்ந்து விஜய் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











