எனக்கு சீனு ராமசாமிதான் தர்மதுரை! - விஜய் சேதுபதி நெகிழ்ச்சி
நான் யார், என் பின்புலம் என்ன என்றெல்லாம் பார்க்காமல் நடிகனாக்கிய இயக்குநர் சீனு ராமசாமிதான் எனக்கு தர்மதுரை என்று நெகிழ்ந்தார் நடிகர் விஜய் சேதுபதி.
தர்மதுரை படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடந்தது. சத்யம் தியேட்டரில் நடந்த இசை வெளியீட்டுக்குப் பிறகு, செய்தியாளர்களை ஆர்கேவி அரங்கில் சந்தித்தனர் இயக்குநர் சீனுராமசாமி உள்ளிட்ட படக்குழுவினர்.

அப்போது விஜய் சேதுபதி பேசியது:
நான் சினிமாவுக்கு வந்த புதிதில் பட வாய்ப்புகள் தேடி அலைந்தேன். சிறுசிறு வேடங்கள்தான் கிடைத்தன. டைரக்டர் சீனுராமசாமி எனக்கு அவ்வப்போது செலவுக்கு 100 ரூபாய் தருவார். வருத்தப்படாதே பெரிய நடிகனாக வருவாய் என்று உற்சாகப்படுத்தவும் செய்வார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் வேறு வேலைக்குச் செல்லலாம் என்று முடிவு எடுத்தேன்.
அப்போது சீனுராமசாமி என்னிடம் அவர் எழுதி இருந்த கதையைப் படிக்கக் கொடுத்து, 'இதில் நீதான் கதாநாயகனாக நடிக்க வேண்டும்' என்றார். அந்த படம்தான் தென்மேற்கு பருவக்காற்று. அதில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய் இருந்தால் இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்து இருக்க முடியாது. கஷ்டப்பட்டுதான் கதாநாயகனாக உயர்ந்தேன்.
எனக்கு சீனு ராமசாமிதான் தர்மதுரை. நான் யார், எனது பின்புலம் என்ன என்று தெரியாமலேயே வாய்ப்பு கொடுத்தார்.
தர்மதுரை சிறந்த படமாக தயாராகி உள்ளது. இதன் படப்பிடிப்பு என்னை 2010-ஆம் ஆண்டுக்கு கூட்டிச்சென்றது. அந்த காலகட்டத்தில் எனக்குள் கலக்கம் ஏக்கம் போன்றவை இருந்தன. அதை இப்போது நினைக்கும்போது ஆனந்தமாக இருக்கிறது. தர்மதுரை படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த படத்தில் மனித உணர்வுகள் இருக்கும்.. ஈரம் இருக்கும். பெண்களின் பெருமையைப் பேசும் படமாகவும் இருக்கும். கதை சுவாரஸ்யமாகவும் முடிச்சுகள்-திருப்பங்கள் கொண்டதாகவும் இருக்கும். தமன்னாவும் சிறப்பாக நடித்து இருக்கிறார். என் சினிமா வாழ்க்கையில் தர்மதுரை முக்கிய படமாக இருக்கும்," என்றார்.


Click it and Unblock the Notifications











