விஜயகாந்த் ராஜாவாம்.. மகனுக்கு முக்கிய வேடமாம்.. தமிழன் என்று சொல்!
சென்னை: மகன் சண்முகப் பாண்டியனுடன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் தமிழன் என்று சொல் படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.
சகாப்தம் படத்திற்குப் பின்னர் நடிகர் சண்முகப் பாண்டியன் தனது 2 வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் அருண் பொன்னம்பலம் இயக்க ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

இன்று இப்படத்தின் பூஜை நடைபெற்றது இதில் விஜயகாந்த், சண்முகப்பாண்டியன், பிரேமலதா, சுதீஷ்,அருண் பொன்னம்பலம் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இது ஒரு சரித்திரப் பின்னணியிலான படமாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. தமிழர்களின் வரலாற்றை சித்தரிக்கும் படமென்பதால் தான் இப்படத்திற்கு தமிழன் என்று சொல் என்ற பெயரை சூட்டியிருக்கின்றனராம்.

விஜயகாந்த் ராஜாவாக நடிக்கும் இந்தப்படத்தில் அவரது மகன் சண்முகப் பாண்டியன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பானது அடுத்த மாதம் தொடங்கும் என்று கூறுகின்றனர். 5 ஆண்டுகளுக்குப் பின்னர் விஜயகாந்த் நடிக்கும் படமென்பதால் அவரது ரசிகர்களிடையே படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications











