என் உயிருக்கு ஆபத்து என்றால் பாடலாசிரியர் தாமரை தான் காரணம்... குற்றம்சாட்டிய விஜி... பின்னணி என்ன?
சென்னை: இனியவளே திரைப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் கவிஞர் தாமரை.
அதன்பின்னர் தொடர்ச்சியாக பாடல்கள் எழுதி வந்த தாமரை, கெளதம் மேனன்னுடனான கூட்டணிக்குப் பிறகு மிகவும் பிரபலமானார்.
கெளதம் மேனன் படங்களுக்கு தொடர்ச்சியாக பாடல்கள் வரும் தாமரை, சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் பாடல்களையும் எழுதியிருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் அவருக்கும் தியாகுவுக்கும் இடையேயான விவாகரத்து குறித்து முகநூலில் எழுதியிருந்த தாமரைக்கு, விஜி என்பவர் பதிலடி கொடுத்துள்ளார்.
தாமரையின் முகநூல் பதிவு
கவிஞராகவும் பாடலாசிரியராகவும் மிகவும் பிரபலமானவர் தாமரை. தொடர்ச்சியாக கெளதம் மேனன் உடன் பணியாற்றி வரும் தாமரை, சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு பட பாடல்களையும் எழுதியிருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல் உட்பட மற்ற பாடல்களும் ஹிட் அடித்தன. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் தனது முகநூலில் ஒரு பதிவு எழுதியிருந்தார் தாமரை. அதில், அவருக்கும் தியாகுவுக்கும் நடந்த திருமண முறிவு பற்றி குறிப்பிட்டிருந்தார். அதில், விஜி என்பவர் மீது குற்றம்சாட்டியிருந்தார். விஜிக்கும் தியாகுவுக்கும் திருமணம் நடக்கவில்லை, அது தகாத உறவு என்ற ரீதியில் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து தாமரை குறிப்பிட்டிருந்த விஜி என்பவர் தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.

விஜி பழனிச்சாமியின் விளக்கம்
மௌனித்து இருப்பதால் குற்றவாளி என்று பொருள் அல்ல என்ற தலைப்பில் முகநூலில் விளக்கம் கொடுத்துள்ள விஜி, "கடந்த சில நாட்களாக என்னைப் பற்றி ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரப்பப்படும் அவதூறு செய்திகள் பற்றி பேச என்னிடம் ஏதுமில்லை. தனிப்பட்ட நபர்களின் காழ்புணர்ச்சியாலும், ஊடகங்களின் அறமற்ற செயல்களால் பரப்படும் அவதூறுகளுக்கு பதிலளிக்கும் அளவிற்கு என் மனநிலை இல்லை. பத்தாண்டுகளுக்கும் மேலாக கவிஞர் தாமரையின் தற்குறித்தனமான தரம் தாழ்ந்த செயல்களால் நானும் எனது மகள்களும் உச்சபட்ச மன உளைச்சலில் தான் வாழ்ந்து வருகிறோம்.".

கடந்து வாழும் துணிவு உள்ளது
மேலும், "இவர்கள் எல்லாம் பரப்பும் அவதூறுகளும் மிரட்டல்களுக்கும் வயதுக்கு வந்த எனது இரு மகள்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கி இருக்கிறது. அதையெல்லாம் கடந்து வாழும் துணிவை அவர்களுக்கு நான் சொல்லி வளர்த்திருந்தாலும் இந்தச் சமூகத்தால் அவர்கள் அச்சுறுத்தப்படும் நிலையில் தான் இப்போதும் இருக்கிறார்கள். நான் சிங்கிள் மதர் என்றும், ஊடகத்துறையில் பணிபுரிவதும் ஊரறிந்த விஷயம். பண மோசடிக்காரி, பல திருமணங்கள் செய்து பிழைப்பவள், திருடி என்றெல்லாம் ஆதாரங்கள் இல்லாத அவதூறு செய்திகளை பொதுவெளியில் பேசுவதும் பரப்புவதும், அதனால் உள்ளூர மகிழ்வதும் வக்கிரமானது என்று உணராமலே, ஊருக்கு நீதி வாங்கி தர துடிப்பவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாமே?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம்
தொடர்ந்து பதிவிட்டுள்ள விஜி, "என்னால் தாமரைக்கும் இன்ன பிறருக்கும் அநீதி நடந்திருக்கிறது என்றால் தாரளமாக அவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளலாம். என்னுடன் பழகும் நபர்களை எல்லாம் தவறாக சித்தரிப்பது, இக்காட்டான மருத்துவ சூழ்நிலையில் நான் இருந்தபோது எனக்கு உதவ வருபவர்களிடம் எனக்கு உதவக் கூடாது என்று சொல்வது, இப்போது உள்ள சூழலில் கூட நடந்தது என்னவென்றே தெரியாமல் ஆதாரமற்ற செய்திகளை பரப்பி மகிழும் சில்லறைத்தனமான செயல்களால் எதுவும் நடந்து விடப்போவதில்லை. தமிழுக்காகவும் பெண்ணுரிமைகளுக்காகவும் மட்டுமே வாழும் தாமரை அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை கேட்க வேண்டிய இடத்தில கேட்காமல் ஊரார் வீட்டில் ரெண்டகம் செய்வது அநாகரீகமான செயல். ஒரு பெண் தான் பார்க்கும் நபர்களுடன் எல்லாம் தவறான உறவில் தான் இருப்பார் என்றால் அது தாமரை என்ற பெண்ணுக்கும் பொருந்தும் தானே?" என கேட்டுள்ளார்.

விரும்பிதான் திருமணம் செய்தேன்
மேலும், "கோவையைச் சேர்ந்த ரத்னசீலன் என்ற நபரை நான் சந்தித்த பிறகு இருவரும் விரும்பித்தான் திருமணம் செய்துகொண்டோம். அது ரத்னசீலன் குடும்பத்துக்கும் தெரியும். அதேபோல ரத்னசீலன் வீட்டில் நான் தங்கியிருந்தவரை அவர்கள் என்னை நன்றாகவே பார்த்துக்கொண்டார்கள். இப்போது ரத்னசீலனது உறவினர்கள் மாறிமாறி பேசுவது போல, என்னால் மாற்றி பேச இயலாது. அவர்களை அசிங்கப்படுத்த நான் விரும்பவில்லை. தாமரை சொல்வதுபோல சொகுசு வாழ்க்கை, விமானம், பணத்திற்கு வேசமிடும் பெண்ணாக நானிருந்தால், ஏற்கனவே வரம்புமீறிய கடனில் இருக்கும், வாடகை வீட்டில் வசிக்கும், மாதம் 23k சம்பளம் வாங்கும் ரத்னசீலனை திருமணம் செய்திருப்பேனா?" என மீண்டும் தனது கேள்வியை முன்வைத்துள்ளார்.

ரத்தம் வர வர என்னை அடித்தார்
"ரத்னசீலன் ஒருவித மன உளைச்சளிலேதான் வாழ்ந்து வந்தார். அது அவரது குடும்ப மற்றும் கடன் பிரச்சினை. புதிதாக இணைந்த என்னிடம் அதுபற்றி முழுமையாக பகிர அவர் விரும்பவில்லை. அவருக்கு குடிப்பழக்கம் இருக்கிறது என்பதே யாருக்கும் தெரியாது. திருமணமான பத்தே நாளில் ரத்தம் வர என்னை அடித்து துன்புறுத்தியது ரத்னசீலன் அப்பா, அம்மா மற்றும் அவர்கள் குடியிருக்கும் வீட்டு ஓனர் வரை அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அதன்பிறகு காவல்நிலையத்தில் புகார் அளிக்க நான் முடிவெடுத்த போது ரத்னசீலன் அம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்க நான் அமைதியாக இருந்துவிட்டேன். அந்த அடிதடி பிரச்சினைக்கு பிறகும் சமரசம் செய்து இணைந்து வாழ விரும்பினேன். ரத்னசீலன் நடவடிக்கைகள் ஏற்புடையதாக இல்லை என்பதால் சண்டைக்கு பிறகான நான்காவது நாள் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்."

யாரும் என்னிடம் கேட்கவில்லை
மேலும், "இன்று மீடியாக்களுக்கும் சமூக வலைத்தளங்களிலும் பேசும் ரத்னசீலன் உறவினர்கள் யார் ஒருவரும் நான் ஏன் போனேன், அதன்பிறகு என்ன நடந்தது என்று இன்றுவரை ஒருவர் கூட என்னிடம் கேட்கவில்லை. மட்டுமின்றி ரத்னசீலன் இறந்த பிறகு எவர் ஒருவரும் என்னிடம் அவர் இறந்த செய்தியை கூட சொல்லவில்லை. அதேபோல இறந்துபோன ரத்னசீலன் பேசிய ஆடியோக்களை மட்டுமே வைத்துக்கொண்டு அவதூறும் பரப்புவர்களுக்கு ஒரு கேள்வி. இன்னொரு பெண் எனக்கு கிடைக்கும் வரை என்னைவிட்டு போய்விடாதே, என் மரணத்துக்கு நீ காரணமில்லை என்றெல்லாம் ரத்னசீலன் பேசிய ஆடியோக்களை பற்றி ஏன் பேசவில்லை?" என கேள்வியெழுப்பியுள்ளார்.

தாமரை தான் பொறுப்பு
"ஏனென்றால் உங்கள் நோக்கம் ரத்னசீலனுக்கு நீதி பெறுவது இல்லை, அதன் வாயிலாக பிறரை துன்புறுத்தி மகிழ்வதே. இறந்து போன ரத்னசீலன் பற்றி எதுவொன்றையும் பேசி பிழைப்பு நடத்தும் கேவலமான நிலையில் நானில்லை. அவரது இறப்பு எனக்கு இழப்புதான். என் மீது பரப்பப்பட்ட, பரப்பப்படும் அனைத்து அவதூறுகளுக்கும் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தயாராகிவிட்டேன். என்மீது குற்றம் சுமத்துபவர்கள் தயவுசெய்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் சந்திக்க எப்போதும் நான் தயார். விரைவில் மீடியாவையும் சந்திப்பேன். மனிததன்மையற்ற பிறரது முன்முடிவுகளுக்கும், முகாந்திரமற்ற அவதூறுகளுக்கும் பதில் சொல்லும் மனநிலையில் நானில்லை. தனி மனிதியாக இருமகள்களுடன் வாழும் எனக்கோ என் மகள்களுக்கோ ஏதேனும் அசம்பாவிதமமோ உயரிழப்போ ஏற்பட்டால் அதற்கு கவிஞர் தாமரையும், ரத்னசீலன் சகோதரியயான கந்துவட்டி தொழில் நடத்தும் பானுப்பிரியாவும் தான் முழுக் காரணம். அவதூறுகளை பரப்பி வாழும் தாமரைக்கும், அவரது பக்க வாத்தியங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்" என முடித்துள்ளார். விஜியின் இந்த முகநூல் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











