மகன் நடித்த பைசன் படம் எப்படி இருக்கு?.. வாவ் விக்ரம் சொன்ன விமர்சனம் இதுதான்.. துருவ் விக்ரம் ஹேப்பி
சென்னை: துருவ் விக்ரம் நடித்திருக்கும் பைசன் திரைப்படம் நாளை வெளியாகவிருக்கிறது. மாரி செல்வராஜின் இயக்கம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு படத்தின் மீது எழுந்திருக்கிறது. கண்டிப்பாக இது துருவ்வுக்கு நல்ல ரிசல்ட்டை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையும் திரைத்துறையில் உருவாகியுள்ளது. இந்நிலையில் பைசன் படத்தை பார்த்துவிட்டு விக்ரம் என்ன சொன்னார் என்பது தொடர்பாக தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியிருக்கிறார்.
சியான் விக்ரமின் மகனான துருவ் பாலா இயக்கத்தில் முதலில் வர்மா படத்தில் நடித்தார். பாலாவின் இயக்கம் திருப்தி அளிக்காததால் அதை அப்படியே பரணில் போட்டுவிட்டு; இன்னொரு இயக்குநரை வைத்து படம் எடுக்கப்பட்டது. ஆனால் இரண்டு வெர்ஷன்களுமே ஹிட்டெல்லாம் ஆகவில்லை. அந்தப் படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான் படத்தில் விக்ரமுடன் சேர்ந்து நடித்தார்.
பைசன் - காளமாடன்: தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்காக இரண்டு வருடங்கள்வரை கபடி பயிற்சியை அவர் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜுனா விருது வென்ற கபடி விளையாட்டு வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை, பசுபதி பாண்டியன் வாழ்க்கை உள்ளிட்டவைகளை தழுவிதான் இந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. துருவ் விக்ரமுக்கு கணேசன்தான் கபடி பயிற்சியும் அளித்திருக்கிறார்.

துருவ்வுக்கு இருக்கும் நம்பிக்கை: இந்தப் படத்தின் மீது அதீத நம்பிக்கையை வைத்திருக்கிறார் துருவ் விக்ரம். ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில்கூட, 'நான் இதற்கு முன்னர் நடித்த இரண்டு படங்களை பார்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இந்தப் படத்தை பாருங்கள். இதுதான் எனது முதல் படம்' என்று கூறினார். அந்த அளவுக்கு இந்தப் படத்தை அவர் நம்பியிருக்கிறார். எப்படியாவது வெற்றி பெற்று தந்தை வழியில் தானும் பெரிய ஸ்டாராகிட வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருக்கிறது.
நாளை ரிலீஸ்: படமானது நாளை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்துடன் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் டியூட், ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் டீசல் ஆகிய இரண்டு படங்களுமே ரிலீஸாகின்றன. எனவே போட்டி பலமாகத்தான் இருக்கிறது. இருப்பினும் மாரி செல்வராஜின் இயக்கம் என்பதால் படம் தரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில் இதற்கு முன்னர் அவர் இயக்கிய நான்கு படங்களுமே ஹிட்டானதோடு மட்டுமின்றி சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்தி கோலிவுட்டின் முக்கியமான படங்கள் வரிசையில் இணைந்திருக்கின்றன.
பாலாஜி பிரபு பேட்டி: இந்நிலையில் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "முதலில் இந்தப் படத்தில் பசுபதி கேரக்டரில் விக்ரமை நடிக்க வைக்கத்தான் மாரி செல்வராஜ் முயன்றார். ஆனால் நான் நடித்தால் அது என்னுடைய படமாக மாறிவிடும் என்று விக்ரம் மறுத்துவிட்டார். பைசன் படத்தை விக்ரம் பார்த்துவிட்டார். படத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜை கட்டியணைத்துவிட்டாராம்.
எனக்கு சேது மாதிரி: மேலும் மாரியிடம், 'நான் எதிர்பார்த்ததைவிடவும் படம் சூப்பராக வந்திருக்கிறது. எனக்கு எப்படி சேது பட அமைந்ததோ அதுபோன்று துருவ் விக்ரமுக்கு இந்தப் படம் அமையும். படம் கண்டிப்பாக ஹிட்டாகும் என்று கூறினாராம். அவர் மட்டுமின்றி மாரி செல்வராஜின் நெருங்கிய நண்பர்களும் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியிருக்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











