நடிகர் சங்கத் தேர்தலில் சமரசத்துக்கு இடமில்லை.. திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் - விஷால் அறிவிப்பு
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசத்திற்கு இடமில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். நடிகர் சங்கத் தலைவர் பதவிக்காகத் தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெறும் பொருட்டு சென்னை தியாகராய நகர் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு வந்த அவர், நடிகர் சங்க தேர்தல் நிச்சயமாக நடைபெறும் என கூறினார்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், இம்மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சரத்குமார் அணியும், விஷால் அணியும் மோதுகின்றன.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் சமீபத்தில் நிறைவடைந்தது. நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இதனிடையே, விஷால் அணி சார்பில், தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கு விஷால் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதே அணியில், நடிகர் நாசர் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், தலைவர் பதவிக்கான வேட்புமனுவை, விஷால் இன்று வாபஸ் பெற்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், நடிகர் சங்க தேர்தல் நிச்சயமாக நடைபெறும் என்றும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசத்திற்கு இடமில்லை என்றும் தெரிவித்தார்.
நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறாது என்றும் சமரசம் நடைபெறுவதாக ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து இவ்வாறு கூறியுள்ளார் விஷால்.


Click it and Unblock the Notifications











