விஸ்வரூபத்திற்கு தடை நீங்கியது: வழக்கை வாபஸ் பெற்றார் கமல்

விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாகக் கூறி தமிழகத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து படம் ரிலீஸாவதற்கு முந்தைய நாள் 2 வார தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த தடையை எதிர்த்து கமல் ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் தடையை நீக்கி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசு மனு தாக்கல் செய்தபோது 2 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தனி நீதிபதியின் உத்தரவுக்கும், படத்திற்கும் தடை விதித்தது. இதையடுத்து பேட்டியளித்த முதல்வர் ஜெயலலிதா கமலும், முஸ்லிம் அமைப்புகளும் உட்கார்ந்து பேசி தீர்வு காண முன்வந்தால் அதற்கு தமிழக அரசு உதவும் என்றார். இதையடுத்து கமல் ஹாசன் தரப்பும், முஸ்லிம் அமைப்புகளும் பிரச்சனையை பேசி சுமூகத் தீர்வு கண்டுள்ளார்கள். படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கமல் ஒப்புக் கொண்டதையடுத்து தமிழக அரசு தான் விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டது.
இந்த பேச்சுவார்த்தை அரசின் உள்துறை செயலாளர் ராஜகோபால் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததையடுத்து உடன்பாட்டில் இருதரப்பும் கையெழுத்திட்டது. இதனால் கமல் அரசின் தடை உத்தரவை எதிர்த்து தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற முடிவு செய்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கமல் தரப்பு வழக்கை வாபஸ் பெறுவதாகக் கூறி மனு தாக்கல் செய்தது. அதில், நீதிமன்றத்திற்கு வெளியே சுமூகத் தீர்வு காணப்பட்டதால் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இதையடுத்து விஸ்வரூபம் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications











