ஶ்ரீதேவி எப்படிப்பட்டவர்... முன்னாள் வாட்ச்மேன் கூறும் நெகிழ்ச்சி தகவல்!
Recommended Video

சென்னை : நடிகை ஸ்ரீதேவி தமிழ்த்திரையுலகம் தாண்டி இந்திய திரையுலகிலும் ஆதிக்கம் செலுத்தியவர். குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீதேவி பின்னர் கதாநாயகியாக ரஜினி, கமல் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்களுடன் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தார்.
தமிழில் திரைப் பயணத்தை தொடங்கிய ஸ்ரீதேவி பாலிவுட்டில் ஹீரோயினாக ஜொலித்தார். இவர் வீட்டில் வேலைசெய்த மாலைராஜா என்பவர் தன்னுடைய அனுபவத்தை கூறியுள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி மனிதாபிமானத்துடன், எளிமையாக பழகக்கூடியவர் என்று அவரது வீட்டு முன்னாள் வாட்ச்மேன் மாலைராஜா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

வாட்ச்மேன் மாலைராஜா
1980-களில் முன்னணி நடிகையாக இருந்த காலத்தில் ஸ்ரீதேவி சென்னையில் வசித்தார். அப்போது அவரது வீட்டில் வாட்ச்மேன் வேலைக்கு ஆள் தேவை என்பதால் நெல்லையை சேர்ந்த மாலைராஜா என்பவரை ஸ்ரீதேவி வேலைக்கு அமர்த்தினார். மாலைராஜா இன்றும் ஸ்ரீதேவி வீட்டுக்கு எதிரில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் வாட்ச்மேனாக உள்ளார்.

தயக்கத்துடன் வேலைக்கு சேர்ந்தேன்
வாட்ச்மேன் மாலைராஜா ஸ்ரீதேவி மறைவு செய்திக்கேட்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் ஸ்ரீதேவி பற்றி அவரது நினைவுகளைப் பதிவு செய்துள்ளார். "நெல்லையிலிருந்து வேலைக்கு வந்தேன். மிகப்பெரிய ஸ்டார் வீட்டில் வேலை எப்படி நடத்துவார்களோ என்ற தயக்கத்துடனே போய் நின்றேன்.

ராஜா என்றே கூப்பிடுவேன்
என்ன பெயர் என்ன என்று கேட்டார்.. மாலைராஜா மேடம் என்றேன். மாலை ராஜா எல்லாம் கிடையாது இனி நான் உங்களை ராஜா என்றுதான் கூப்பிடுவேன் சரியா என்று மிக எளிமையாக பெரிய கதாநாயகி என்ற எண்ணம் இல்லாமல் சாதாரணமாக பேசினார்.

வேலைக்காரனாக பார்க்கவில்லை
அங்கு வேலைக்குச் சேர்ந்திருந்த நேரத்தில் தான் எனக்கு திருமணமாகி இருந்தது. அவர் என்னை வேலைக்காரனாக பார்க்கவில்லை. சக மனிதராக மதித்து நடத்துவார். எளிமையானவர். பந்தா அவருக்கு வராத ஒன்று. அவரது வீட்டில் வாட்ச்மேனாக இருந்த நேரத்தில் தான் எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது.

உன்னை நம்பித்தான் வீட்டை விட்டு செல்கிறேன்
அவர் எனது பிள்ளைகள் படிப்பு மற்ற விஷயங்களில் பெரிய அளவில் உதவி இருக்கிறார். ஷூட்டிங்குக்காக அவர் வெளியே போகும் போதெல்லாம் ராஜா உங்களை நம்பித்தான் வீட்டை விட்டு செல்கிறேன் என்று ஒவ்வொரு முறையும் சொல்லி விட்டுத்தான் செல்வார். பின்னர் அவரது வாழ்வில் திருமணம் நடந்தது. மகிழ்ச்சியாக இருந்தார்.

என்ன பிரச்னை என்றாலும் பேசு
நீ வேலையை விட்டு சென்றால் உனக்கு என்ன பிரச்னை என்றாலும் என்னிடம் நேரடியாக பேசு என்று ஸ்ரீதேவி அடிக்கடி சொல்வார். குடும்ப விபரங்களைக் கேட்பார். சாதாரண நிலையிலிருந்து உயர்ந்த இடத்திற்கு வந்ததால் இயல்பாகவே அவரிடம் எளிமை இருந்தது. பின்னாளில் அவர் மும்பைக்கு சென்ற பின்னர் தொடர்பு குறைந்துவிட்டது.

நினைத்துப் பார்க்கவே முடியவில்லை
நானும் எதிர்புறம் உள்ள அபார்ட்மெண்டுக்கு வாடகைக்கு வந்துவிட்டேன். அவரது மரணச்செய்தியை காலையில் தான் அறிந்தேன். எனது சகோதரி ஒருவரை இழந்தது போல் உணர்கிறேன், ஸ்ரீதேவி என்றால் இனிமையாக பழகும் அவரது முகம் தான் நினைவுக்கு வருகிறது. அவர் இல்லாததை நினைத்து பார்க்க முடியவில்லை." என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் மாலைராஜா.


Click it and Unblock the Notifications











