தயாரிப்பாளர் சங்கத்தில் விஷமிகள் ஊடுருவ விடமாட்டோம்! - ஜேஎஸ்கே பேச்சு
தயாரிப்பாளர் சங்கத்தில் விஷமிகள் (விஷால் அணி) ஊடுருவ விடமாட்டோம் என்று தயாரிப்பாளர் ஜேஎஸ்கே கூறினார்.
ஆரோகணம், தங்க மீன்கள், குற்றம் கடிதல் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர், வெளியிட்ட ஜேஎஸ்கே எனும் ஜே சதீஷ்குமார், முதல் முறையாக தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஆர் ராதாகிருஷ்ணன் தலைமையில் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

இந்த அணிக்கு தற்போதைய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு மற்றும் செயலாளர் டி சிவா ஆதரவு தெரிவித்துள்ளனர். ராதாகிருஷ்ணன் அணிக்கு ஆதரவாக, தயாரிப்பாளர் பதவிக்கான போட்டியிலிருந்தும் சிவா விலகிக் கொண்டார். இதனை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று பிரசாத் லேபில் நடந்தது.
இவ் விழாவில் முதலில் வரவேற்றுப் பேசிய கௌரவச் செயலாளருக்குப் போட்டியிடும் கே.சதீஸ்குமார் (ஜேஎஸ்கே) பேசும்போது, ''தயாரிப்பாளர்கள் ஒன்றே குலம் என்று இருப்பவர்கள். நாங்கள் ஒரே குடும்பம். இங்கே 1000 கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் விஷமிகள் ஊடுருவ விடமாட்டோம்.

இந்த அணிக்கு ஆதரவாக எஸ்.தாணு அவர்களும் டி.சிவா அவர்களும் தோள் கொடுப்பது இதன் ஒற்றுமைக்குச் சாட்சி. எங்களை வழிநடத்தும் ஜே.கே. ரீத்தீஷ், இயக்குநர் சேரன் அவர்களுக்கு நன்றி.
தயாரிப்பாளர் சங்கம் தயாரிப்பாளர் சங்கமாகவே இருக்க வேண்டும். இங்கே தொழில் முறையில் முழுநேர தயாரிப்பாளர்கள் மட்டுமே இருக்க வேண்டும். நடிகர் சங்கம் ஊடுருவ இடமில்லை. அவர்களுக்கு இது வேண்டாத வேலையும்கூட. நடிகர் சங்க வாக்குறுதிகளையே அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவர்களைப்போல நாங்கள் தரமற்ற விமர்சனம் செய்ய மாட்டோம். செயலில் காட்டுவோம்...," என்றார்.


Click it and Unblock the Notifications











