வரி ஏய்ப்பு விவகாரம்.. ஏ.ஆர்.ரஹ்மானை அவமானப்படுத்தும் எண்ணம் இல்லை.. மத்திய அரசு பதில்!
சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக ஜிஎஸ்டி அமைப்பு அவர் மீது தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
தான் வரி ஏய்ப்பு எதுவும் செய்யவில்லை என்றும் தன்னுடைய பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது என ஏ.ஆர். ரஹ்மான் தரப்பு பதில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், ஆதாரங்களின் அடிப்படையிலேயே வழக்கு தொடர்ந்ததாகவும் ஏ.ஆர். ரஹ்மானை அவமானப்படுத்தும் எண்ணம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஏகப்பட்ட படங்களில் பிசி
இந்த ஆண்டின் முதல் பாதியில் அனிருத் இசையில் ஏகப்பட்ட படங்கள் வெளியாகி ஹிட் அடித்தன. இரண்டாம் பாதியில் ஏ.ஆர். ரஹ்மான் மீண்டும் நான் வந்துட்டேன் கண்ணா என தனது சிக்ஸர்களை விளாச தொடங்கி இருக்கிறார். கோப்ரா, இரவின் நிழல், வெந்து தணிந்தது காடு படங்களை தொடர்ந்து அடுத்ததாக இந்த வாரம் பொன்னியின் செல்வன் படமும் வெளியாகிறது.

வரி ஏய்ப்பு செய்தாரா ஏ.ஆர்.ரஹ்மான்
இதுவரை ஏ.ஆர். ரஹ்மான் மீது எந்தவொரு அவதூறு வழக்குகளும் இடம்பெறாமல் மிஸ்டர் பெர்ஃபக்ட் ஆக இருந்து வரும் அவர் மீது வரி ஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி கவுன்சில் சார்பாக தொடரப்பட்டுள்ள வழக்கு பரபரப்பை கிளப்பி உள்ளது. பாடல்களின் உரிமத்தை தயாரிப்பாளருக்கு தராமல் இவரே வைத்துள்ள நிலையில், சுமார் 6 கோடியே 79 லட்சம் ரூபாய் சேவை வரியை ஏ.ஆர். ரஹ்மான் செலுத்த வேண்டும் என 2019ல் வழக்கு தொடரப்பட்டது.

ஏ.ஆர். ரஹ்மான் மறுப்பு
எந்தவொரு வரி ஏய்ப்பும் தான் செய்யவில்லை என்றும், தன்னுடைய பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கவே இப்படியொரு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக ஏ.ஆர். ரஹ்மான் தரப்பு விளக்கம் கொடுத்து பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இதுதொடர்பாக ஜிஎஸ்டி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

களங்கம் ஏற்படுத்த அல்ல
ஏ.ஆர். ரஹ்மானின் புகழுக்கு களங்கம் விளைவிக்க இந்த வழக்கை தொடரவில்லை என்றும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே வழக்கு தொடர்ந்துள்ளோம் என ஜிஎஸ்டி ஆணையர் சென்னை உயர்நீதி மன்றத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இந்நிலையில், இரு தரப்பு வாதத்தையும் விசாரித்த நீதிபதி வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.


Click it and Unblock the Notifications











