மோகன்லாலில் மெகா பட்ஜெட் சினிமா... மரைக்கார் படத்துக்கு தடை கோரி வழக்கு... தலையிட ஐகோர்ட் மறுப்பு
கொச்சி: மோகன்லால் நடித்துள்ள 'மரைக்கார்: அரபிகடலிண்டே சிம்ஹம்' படத்துக்குத் தடை விதிக்க முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மலையாளத்தில் மெகா பட்ஜெட்டில் பட்ஜெட்டில் உருவாகும் வரலாற்றுப் படம் 'மரைக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்'.
16 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் கடல் வழியாக இந்தியாவுக்கு வந்தபோது அவர்களை எதிர்த்து போராடிய குஞ்சலி மரைக்கார் என்ற வீரரின் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது.
மஞ்சு வாரியர்
இதில் குஞ்சலி மரைக்காராக மோகன்லால் நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி, அர்ஜுன் சாரா, மஞ்சு வாரியர், சித்திக் உள்பட பலர் நடிக்கிறார்கள். பிரபு, தங்காடு என்ற கேரக்டரிலும், சுஹாசினி, குஞ்சலி மரைக்காரின் தங்கை கேரக்டரிலும், அசோக் செல்வன் அச்சுதன் என்ற வில்லன் கேரக்டரிலும் நடிக்கிறார்கள்.

அரபிக்கடலின் சிங்கம்
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற 5 மொழிகளில் படத்தை வெளியிட உள்ளனர். பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு தமிழில், 'மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்' என்ற பெயர் வைத்துள்ளனர். படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். இதுபற்றி அவர் சமீபத்தில் ட்விட்டரில் இதைத் தெரிவித்திருந்தார்.

மனுதாக்கல்
'சிறைச்சாலை என்னும் பிரமாண்ட படைப்பில் உருவான நம் கூட்டணி, 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நம் மக்களை பிரமிக்க வைக்கும் ஒரு காவிய படைப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்' என்று அவர் அதில் கூறியிருந்தார். இந்த படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் குஞ்சலி மரைக்காயரின் சந்ததியை சேர்ந்த முபீதா அராபத் மரைக்கார் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

தடைவிதிக்க வேண்டும்
அதில், படத்தின் டீசரை பார்த்தேன். அதில் மரைக்காயரின் பெருமைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் அவர் குடும்பத்தினரை இழிவுப்படுத்தும் விதமாகவும் காட்சிகள் இருக்கின்றன. இது சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும் என்றும் இதனால் படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

சர்ச்சைகள் ஏற்படாது
இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் இந்த பிரச்னையில் தலையிட முடியாது என்று கூறிவிட்டது. படத்தை தணிக்கை செய்த சென்சார் அதிகாரிகள், படத்தில் எந்த காட்சிகளையும் வெட்ட வேண்டியதில்லை என்றும் இந்தப் படத்தால் தேவையில்லாத சர்ச்சைகள் ஏற்படாது என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











