சினிமா டிக்கட் கட்டண உயர்வு யாருக்கு லாபம்?
Recommended Video

தமிழக அரசு சினிமா தியேட்டர் டிக்கட் கட்டணங்களை உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த கட்டண உயர்வு நியாயமானது இல்லை என தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
2006ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட டிக்கட் கட்டணத்தில் இருந்து 25% உயர்த்திக் கொள்ள அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் சொத்து வரி, மின்சார கட்டணம், பராமரிப்பு செலவுகள் மடங்கு அதிகரித்து உள்ளது.

இவை எதையும் கருத்தில் கொள்ளாமல் 25% டிக்கட் கட்டண உயர்வு நகர்புறங்களில் இருக்கும் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களுக்கு மட்டுமே பயனளிக்க கூடியதாக இருக்கும்.
தமிழகத்தில் புற நகர், கிராமம் சார்ந்த தியேட்டர்கள் 80% வீதம் உள்ளன. 2006ல் ரூபாய் 10 ஆக இருந்த டிக்கட் கட்டணம் தற்போதைய அரசு ஆணை மூலம் 12.50 ரூபாயாக உயர்த்திக் கொள்ள முடியும். கடந்த பத்தாண்டுகளாக முண்னணி நடிகர்களின் புதிய படங்களுக்கு 100, 150 என டிக்கட்டுகள் விற்கப்பட்டு வருகின்றன. அப்படியும் தியேட்டர்கள் நஷ்டத்தில்தான் இயங்கி வருகின்றன.
நகர்புறங்களில் இருக்கும் தியேட்டர்கள் தொடக்கத்தில் இருந்தே அதிகபட்சம் 100 ரூபாய் டிக்கட் கட்டணமாக அரசு அனுமதி அளிக்கிறது. மால் தியேட்டர்களில் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் பங்குத் தொகை அதிகபட்சம் 50% என்பதால் தியேட்டர் நிர்வாகத்திற்கு அதிக வருவாய் கிடைக்கிறது. கேண்டீன், பார்க்கிங் மூலம், டிக்கட் விற்பனையில் கிடைக்கும் வருவாயை விட அதிக வருவாய் கிடைக்கிறது. அதில் 60% லாபம் உள்ளது. இவை எதையும் கருத்தில் கொள்ளாமல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான டிக்கட் கட்டண உயர்வு பாரபட்சமானது, ஏற்ககூடியது அல்ல என்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.
2006ல் தியேட்டரில் படங்களைத் திரையிட முதன்மை தியேட்டர்களுக்கு சில லட்சங்கள்தான் தேவைப்பட்டது. தற்போது குறைந்த அட்வான்ஸ் ஐந்து லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. மால் தியேட்டர்கள் படங்களை திரையிட அட்வான்ஸ், எம்.ஜி பணம் இல்லை என்பதால் முதலீட்டு ரிஸ்க் இல்லை.
தமிழ் திரைப்படங்களுக்கு பிரதான வருவாய் ஈட்டித் தரக் கூடிய தனித் திரையரங்கு, புறநகர் தியேட்டர்களுக்கு டிக்கட் கட்டண உயர்வில் முன் உரிமையும், சிறப்புக் கவனமும் தேவை என தியேட்டர் உரிமையாளர்கள் கோருகின்றனர்.
- ஏகலைவன்


Click it and Unblock the Notifications











