பாகுபலி.... பயப்பட்றியா குமாரு?
மாற்று சினிமா என்று பேசத் தொடங்கினால் இயக்குநர்கள் ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றவர்களை தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாது!
அந்த வரிசையில் கமலுக்கும் இடம்முண்டு என்பதற்கு சாட்சியங்கள் தேட வேண்டியதில்லை!
ஃபிலிமை வெட்டி ஒட்டி எடிட் பண்ணிக்கொண்டிருந்த காலத்தில் ஆவிட் எடிட்டிங் முறையை அறிமுகப்படுத்தியவர் கமல்தான் என்பது ஊரறிந்த செய்தி என்றாலும் இந்தக் கட்டுரையின் தேவைக்கு ஞாபகப்படுத்துவது அவசியமாக இருக்கிறது.

இன்றைக்கு மொபைல் போன் வைத்திருக்கிற அத்தனை பேரும் தன்னை பி.சி.ஸ்ரீராம் ஆக நினைத்துக்கொண்டு படம் எடுத்துத் தட்டிவிட்டு சோஷியல் நெட்வொர்க்கை கதற விடுகிறார்கள். அதற்கு முன்னோடியாக இருந்தவரும் கமல்தான். டிஜிட்டலில் வந்த முதல் படம் மும்பை எக்ஸ்பிரஸ்! தரமான தியேட்டரில் பூச்சி பறந்தது தனிக்கதை! ஆனால், அந்த ரிஸ்க்கை எடுத்துப் பார்த்தவர் கமல் என்பதுதான் வரலாறு.
சினிமாவுக்காக தன்னை அர்பணித்துக்கொண்ட மிகச் சிலரில் கமல் முதலானவர். அவரே சொன்னதுபோல் அவரது பாத்ரூமை எட்டிப் பார்ப்பதை இந்த இடத்தில் ஞாபகமாகத் தவிர்த்துவிடுங்கள்.
மாத வருமானம் வருகிறார்போல் பெரிய முதலீடு எதையும் அவர் செய்யவில்லை. சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிலேயே போடுகிறார் என்பது சினிமாவை நேசிக்கும் எல்லோரும் தெரியும்!
தசாவதாரம் படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் என்றாலும் கமலின் பங்களிப்பில்லாமல் அந்தப் படம் இல்லை. இவர் நடிக்கும் எல்லா படங்களுக்கும் இது பொருந்தும்! இந்தியன் சங்கர் இயக்கிய படம்தான்...ஆனால் 'இந்தியன் தாத்தா?' கமலின் தேடலுக்கு கிடைத்த அடையாளம்.
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை வைத்து படம் எடுக்க முதன்முதலில் ஆசைப்பட்டவர் அமரர் எம் ஜி ஆர். அதன் பிறகு கமல், மணிரத்னம் என பலரும் முயற்சித்துப் பார்த்து கைவிட்ட கதை, இன்னும் கதையாகவே இருப்பது தனிக் கதை!

அதன் பிறகு 1997-ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து, தயாரிக்க இருப்பதாக தொடங்கப்பட்ட படம் 'மருதநாயகம்'. அவரே தயாரித்து இயக்குவதாகத் திட்டம். இந்தப் படத்தின் தொடக்க விழா தரமணியில் உள்ள எம் ஜி ஆர் ஃபிலிம் சிட்டியில் நடந்தது.
இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத் பங்கேற்றார். மிகப் பிரம்மாண்டமான முன்னோட்டக் காட்சிகள், தொடக்கவிழா என அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய படம் 'மருதநாயகம்'.
இந்திய சினிமாவை உலகத் தரத்துக்கு கொண்டு போகும் முயற்சி என ஊரே கொண்டாடினாலும் எதிர்ப்புகளும் இல்லாமல் இல்லை!
முகமது யூஸுப் கான் ஒரு வில்லன், அவனை எப்படி நீங்கள் ஹீரோவாக சித்தரிக்கலாம் என கிரிட்டிக்ஸ் அத்தனைப் பேரும் கமலை கிழித்து தொங்கவிட்டதும் கடந்தகால நிஜம்.
அதன் தொடர்ச்சியாக நிதி நெருக்கடி காரணமாக 'மருதநாயகம்' படம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கமல் அளித்த பல பேட்டிகளில் 'மருதநாயகம்' பற்றிய கேள்விக்கு, "அப்படத்தின் பட்ஜெட்டிற்கு எந்த ஒரு தயாரிப்பாளராவது முன்வந்தால் மீண்டும் தொடங்கப்படும்," என்று சொன்னார்.
விஸ்வரூபம் நடந்து கொண்டிருக்கும்போது கூட '100 கோடி முதலீடு செய்ய ஒரு நிறுவனத்தோடு பேசிக்கொண்டிருக்கோம், நடக்கும் என நம்புகிறேன்' என்று சொன்னதாக ஞாபகம்!
கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பற்றிய அறிவு நமக்கு இல்லாத காலத்திலேயே 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில், குள்ள அப்புவாக வந்து ஒட்டு மொத்த சினிமா ரசிகனையும் தொழிழ்நுட்ப வல்லுனர்களையும் அதிரவிட்ட கமலை எப்படி மறக்க முடியும்?!
'வார்டன்னா அடிக்கத்தான் செய்வோம்' என்று வடிவேலு படத்தில் ஒரு டயலாக் வரும்,தொழில் நுட்பம்னா தமிழ் ரசிகனுக்குத் தெரிஞ்ச ஒரே அடையாளம் கமல்தானே!
ஒருமுறை கமலை அவரது அலுவலகத்தில் சந்திக்கப் போயிருந்தார் இயக்குநர் அமீர். தனது பிரத்யேகமான ஹோம் தியேட்டரில் மருதநாயகம் எடுத்தவரை இருந்த 22 நிமிட ஃபுட்டேஜை போட்டுக் காட்டியிருக்கிறார் கமல்.
பிறிதொரு சந்தர்பத்தில் அமீர் அண்ணனும் நானும் பேசிக்கொண்டிந்தபோது மருதநாயம் படம் பார்ததைப் பற்றி சொல்லிவிட்டு, "சுந்தரு... நானெல்லாம் டைரக்டர்னு வெளியில சொல்லிக்கக்கூடாது! அந்த மனுஷன் என்னமா படம் பண்ணிருக்காரு! கிட்டக்கூட நெருங்க முடியாது. அது வேற லெவல் படம்," என்று சிலாகித்துச் சொன்னார்.

'அமீர் அண்ணன் படத்தில் கடைசி அசிசஸ்டன்டா ஒர்க் பண்ணாக்கூடப் போதும்' என்று வெறிகொண்டு கோடம்பாக்கத்தில் உதவி இயக்குநர்கள் ஏங்கிக்கொண்டிருந்த காலம்; அந்த நிலையில் அமீர் அண்ணன் சொன்னார் 'அவரை (கமலை) நெருங்க முடியாது' என்று!
அடிக்கிற வெயில்ல இந்த ஃப்ளாஷ் பேக்கெல்லாம் இப்போ எதுக்கு என்று கேள்வி உங்களுக்குள் வந்திருக்கும்! காரணமாகத்தான் என்பதை அடுத்த பாராக்கள் சொல்லும்.
சினிமாவை டெக்னிக்கலாக முன்னெடுக்க முயற்சிக்கும் உன்னத கலைஞன் கமல் இப்போது கள்ள மௌனம் சாதிப்பது ஏன்? ராஜமௌலி என்றொரு இயக்குநர் சினிமாவுக்கு வந்து சில காலங்களிலேயே அதிரடி பண்ணி, அசுரப் பாய்ச்சலாக எழுந்து நின்று பாகுபலி என்றொரு படத்தைக் கொடுத்திருக்கிறார். ஊரே தன் வீட்டுப் பிள்ளை வெற்றி பெற்றதுபோல் கொண்டாடுகிறது. ஆனால், அந்தப் படத்தைப் பார்த்ததாகவோ, பார்க்க விருப்பம் இருப்பதாகவோ இதுவரை ஒரு வார்ததைகூடச் சொல்லவில்லை, திரை தொழில்நுட்பத்தில் முன்னோடியான கமல்!?

சமீபகாலமாக எதற்கெடுத்தாலும் ட்வீட் பண்ணி தன் கருத்தைப் பதிவு செய்வது என்று தொடர்ச்சியாக ட்ரெண்ட் அடித்துக் கொண்டிருந்தவர். இந்த விசயத்தில் அமைதி காப்பதில் உள்ள கள்ள மௌனம் எதற்காக?!முதலில் கமல்தானே இந்தப் படம் பற்றிப் பேசியிருக்கணும்!
இவர் இப்படியென்றால் இந்தி கான்கள் பயங்கற சைலண்ட் மோடில் இருக்கிறார்கள். அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான், அக்ஷைகுமார்... அவ்வளவு ஏன்,டிவிட்டரில் அதிக ஃபாலோயர்ஸ் வைத்திருக்கும் அமிதாப் கூட இந்தப் படத்தைப் பற்றி வாய்திறக்கவில்லையே?
காரணம், இந்தி கான்களின் வியாபார எல்லையைக் கடந்து வெகு தூரம் போய்விட்டது பாகுபலி!
ஒட்டு மொத்த சினிமாவையும் அவ்வப்போது முட்டுகொடுத்து தூக்கிவிடறோம் என்று சொன்னது அவ்வளவுதான!?
பயப்பட்றியா குமாரு!?
- வீகே சுந்தர்


Click it and Unblock the Notifications











