பத்மாவதி இந்தி படத்துக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு?
Recommended Video

தமிழில் மும்பை படம் ரீலீஸ் ஆன போது இயக்குநர் மணிரத்னம் என்ன பிரச்சினையை எதிர்கொண்டாரோ, விஸ்வரூபம் பட வெளியீட்டில் கமல் என்னென்ன பிரச்சினைகளைச் சந்தித்தாரோ அவற்றிலிருந்து வேறுபட்டது பத்மாவதி படத்துக்கு வந்துள்ள பிரச்சினை.
பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் மற்றும் பலர் நடித்துள்ள இந்தி திரைப்படமான 'பத்மாவதி' வெளிவருவதற்கு முன்பே கடுமையான எதிர்ப்பு ஏன்? பத்மாவதியின் கணவராக ஷாகித் கபூர் இந்த படத்தில் நடித்துள்ளார்.
அந்தப் படம் வெளியாவதைத் தடை செய்ய வேண்டும் என்று ராஜபுத்திரர்களின் அமைப்புகள் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்தளவு எதிர்ப்பிற்கு என்ன தான் காரணம், பத்மாவதி எனும் மகாராணிக்கு வரலாறு எதுவும் உண்டா?
மாலிக் முகமது ஜெயசி எனும் இஸ்லாமிய கவிஞர் வட இந்தியாவில் பேசப்படும், 'அவதி (Awadhi)' மொழியில், 16-ஆம் நூற்றாண்டில் எழுதிய 'பத்மாவத் (Patmavat)' எனும் கவிதை தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு கற்பனை கலந்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மேவார் பகுதியின் மகாராணி பத்மாவதி, ராஜபுத்திர மன்னர் ரத்ன சிம்மாவின் மனைவி என்று ராஜபுத்திரர்கள் கூறுகின்றனர்.
ரத்தன் சிம்மா போரில் கொல்லப்பட்டபின், ராணி பத்மாவதியை அடைவதற்காக டெல்லி ஆளுநராக இருந்த அலாவுதீன் கில்ஜி மேவார் நாட்டின் தலைநகராக விளங்கிய சித்தோர்கர் மீது படையெடுத்து வந்தபோது அவரிடமிருந்து தப்பிக்க பத்மாவதி தனது கணவன் சிதையில் உடன் கட்டை ஏறியதாக ராஜபுத்திரர்கள் இன்றும் நம்புகின்றனர். அது பற்றி ராஜஸ்தானில் இன்றும் கதை சொல்லப்படுகிறது.

அலாவுதீன் கில்ஜி மற்றும் பத்மாவதிக்கு இடையே காதல் இருந்ததாக தவறான செய்தி இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் ராணி பத்மாவதியை தெய்வமாக வணங்கும் ராஜபுத்திரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் பத்மாவதி படப்பிடிப்புத் தளத்தை அடித்து நொறுக்கிய கர்னி சேனா அமைப்பினர், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியையும் தாக்கினர்.
கர்னி சேனா அமைப்பின் ராஜஸ்தான் மாநில தலைவர் மஹிபால் சிங் மக்ரானா, "ராமாயணத்தில் சூர்ப்பனகையின் மூக்கை வெட்டியதைப் போல அந்தப் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனேவின் மூக்கையும் வெட்டுவோம்," என்று வியாழக் கிழமையன்று கூறியிருந்தார்
சஞ்சய் லீலா பன்சாலி அல்லது தீபிகா படுகோனேவின் தலையைத் துண்டித்து கொண்டு வருபவர்களுக்கு 5 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் அகில பாரதிய சத்திரிய யுவ மகாசபை எனும் அமைப்பின் தலைவர் தாக்கூர் அபிஷேக் சோம் அறிவித்துள்ளார்.
யோகி ஆத்யநாத் தலைமையிலான உத்திரப்பிரதேச அரசு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி அம்மாநில உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால், சட்டம் - ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு அத்திரைப்படம் அந்த நாளில் வெளியிடப்படக் கூடாது என்று கோரி கடிதம் எழுதியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட ராஜபுத்திரர்கள் ஆதிக்கம் மிக்க வீரம் செறிந்தவர்கள். தங்களால் காவல் தெய்வமாக வணங்கப்படும் சித்தூர் பத்மாவதியை தவறாக சித்தரித்து எடுத்துள்ளதாகக் கூறப்படுவதை ஏற்க முடியவில்லை. இதனால், ராஜபுத்திர மன்னர்களின் தலைநகராக விளங்கிய சித்தோர்கார் கோட்டை உள்பட ராஜபுத்திரர்கள் வாழும்பிற மாநிலங்களிலும் இந்தத் திரைப்படத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆனால் படத்தைப் பார்க்காமலேயே இப்படித்தான் காட்சிகள் இருக்கும் என்று நம்பி ஒரு படத்தை நிறுத்துவது சரியா? என்ற கேள்விக்கும் பதிலில்லை.


Click it and Unblock the Notifications











